நாட்டை நோக்கிய பெரிய ஆபத்து எதுவென்றால்.. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் -வாங்குவதும் தான்! -ஈஸ்வரன்
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலை பற்றி பேசுவது நேர விரயம் என்றும் நாட்டை நோக்கிய மிகப்பெரிய ஆபத்து எதுவென்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தான் எனவும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றிபெறுபவர்கள் தேர்தலில் செய்த செலவுகளை சம்பாதிப்பதற்கும் அடுத்த தேர்தலுக்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்கும் தான் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள் எனக் கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவிப்பதாவது;

நாடு முழுவதும் பரவலாக "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற தலைப்பில் விவாதங்கள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தேர்தல் சீர்திருத்தம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்குமா என்ற கேள்வியைத்தான் நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கேட்கிறார்கள்.
தேசத்தின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி இருப்பது ஓட்டுக்கு பணம் என்ற பழக்கம் சாமானியனும் தேர்தலில் நிற்கலாம் என்ற நிலை மாறி இன்றைக்கு பணம் உள்ளவர்கள் தான் தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலை உருவாக்கி இருப்பது, ஓட்டுக்கு பணத்தை கொடுத்து மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்கள் தேர்தலில் செய்த செலவுகளை சம்பாதிப்பதற்கும் அடுத்த தேர்தலுக்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்கும் தான் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
நமது நாட்டை நோக்கிய மிகப்பெரிய ஆபத்து எதுவென்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தான். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் தேர்தல் சீர்திருத்தம் தான் இன்றியமையாத ஒரு தேவையாக உருவாகி இருக்கிறது. அப்படிப்பட்ட சீர்த்திருத்தத்தை தான் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயகம், பணநாயகம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் பேசப்பட்டாலும் தோற்றவர்கள் பணநாயகத்தால் தோற்றோம் என்று வெளிப்படையாக சொல்வது வாடிக்கையாகி இருக்கிறது. எப்படிப்பட்டாவது தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். அப்படிப்பட்ட சீர்த்திருத்தம் தான் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சீர்திருத்தம் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக என்ன சட்டதிட்டங்களை உருவாக்க பாடுபடுகிறது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது என்றால் எந்த ஒரு தேர்தல் சீர்திருத்தமும் தேவையில்லாத ஒன்று. இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வருகின்ற நிலையில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பேச வைத்திருப்பது நேர விரயம்.












Click it and Unblock the Notifications