காவலன் எஸ்ஓஎஸ் செயலி! "பொள்ளாச்சி இன்பாக்களை" பிடிக்கும் ஆயுதம்! எதற்கும் துணிந்தவன் சொல்வது என்ன?
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் எதற்கும் துணிந்தவன்.
ஏற்கெனவே சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக வாழ்ந்திருப்பார். அதே போல் இந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் அவர் வக்கீல் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதே இது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் குறித்த கதை என பேசப்பட்டது. அதே போல் பணபலம், அதிகார பலம், அரசியல் பலம் கொண்ட வில்லன் இன்பா 4 இளைஞர்களை வைத்து அப்பாவி பெண்களை காதலித்து அவர்கள் வலையில் விழவைத்து, பின்னர் அந்த பெண்களை இன்பாவுக்கு விருந்தாக்குகிறார்கள்.

சாலை விபத்து
இது போல் அடைத்து வைத்திருக்கும் பெண்கள் தப்பி வெளியே வந்தால் அவர்கள் சாலை விபத்தில் கொல்லப்படுகிறார்கள். சூர்யாவின் சித்தப்பா, சித்தி, சித்தப்பாவின் மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை!. அந்த பெண்ணின் செல்போனை ஆராய்ந்து ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கிறார்.

இயக்குநர் பாண்டிராஜ்
இந்த படத்தில் பாண்டி ராஜ் நிறைய மெசேஜ்களை சொல்லியுள்ளார். வடநாடு, தென்னாடு என இருக்கிறது. இங்கிருந்து திருமணத்திற்கு பெண்ணை கொடுப்பதும் பெண்ணை எடுப்பதுமாக இருக்கிறார்கள். இரு ஊர்க்காரர்களும் இணைந்து பெண்களுக்கு மரியாதை செய்வதற்காக பெண் புகழ் என்ற ஒரு விழாவை எடுக்கிறார்கள். இது ஒவ்வொரு முறையும் பெண் குழந்தை பிறக்கும் போது எடுக்கிறார்கள்.

111 மரக்கன்றுகள்
அந்த பெண் குழந்தை பிறந்தவுடன் 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள். அதில் 11 பனை மரங்கள். அந்த பெண் திருமண வயதான 21 ஐ அடையும் போது அந்த மரங்களில் இருந்து கிடைக்கும் காய், கனிகளை கொண்டு லாபத்தை ஈட்டி அதை வைத்தே அந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்ற ஒரு உன்னதமான விஷயத்தை சொல்லியுள்ளார். பெண் குழந்தை பிறந்தால் அது செலவு, சீர் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் அக்குழந்தையை பெரும்பாலும் கருவிலேயே அழிக்கும் நிலை உள்ளது. பெண் குழந்தைகளை பாரமாக நினைக்காமல் அவர்கள் பிறந்தவுடன் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. இதில் மாதந்தோறும் முடிந்த அளவு பணம் சேர்த்துக் கொண்டே வந்தால் அந்த பணம் அந்த பெண் கல்லூரியில் பயில்வதற்கோ திருமணத்திற்கோ எடுத்து பயனடையலாம். பெண் குழந்தைகள் நீதி அளிக்கும் தேவதைகள் என்ற வசனம் இடம் பெற்றிருக்கிறது.

பெண் சிசு கொலை
பெண் சிசு கொலை குறித்து விழிப்புணர்வு இந்த படத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது போல் பெண்கள் தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தால் காவலர்களை அழைக்க ஏதுவாக காவலன் எஸ்ஓஎஸ் செயலியை தங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது. காவலன் செயலியை டவுன்லோடு செய்து கொண்டு ஆபத்திலிருக்கும் போது அதன் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம். இதைத்தான் நிறைய பெண்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொடுப்பார்.

காவலர் செயலி
வில்லன் இன்பாவை பிடிக்க இந்த காவலன் செயலிதான் சூர்யாவுக்கு உதவும். கதாநாயகியின் தோழியாக வருபவர் காதல் வலையில் சிக்கி இன்பாவிடம் சிக்குவார். பின்னர் அங்கிருந்து தப்பி தனது செல்போனில் உள்ள எஸ்ஓஎஸ் ஆப் மூலம் சூர்யாவுக்கு தகவல் கொடுப்பார். சூர்யா சரியான நேரத்திற்கு போய் அந்த பெண் கொலை செய்யப்படாமல் தடுப்பார். ஆபாசமாக ஒருவன் புகைப்படம் எடுத்துவிட்டால் அது அவனுடைய தவறே தவிர பெண்ணுடைய தவறு எதுவும் இல்லை, அப்படியிருக்கும் போது எதற்காக பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரை விட வேண்டும் என சூர்யா கேட்பார். அதே போல் காதல் வலையில் சிக்க வைக்கும் இளைஞர்களின் பெற்றோரையும் ஆண் பிள்ளைகளை இப்படியா வளர்ப்பது என சூர்யா கேட்பார். இன்று பெண்கள், குழந்தைகள் இப்படி உடை அணியக் கூடாது, இவனிடம் பேசக் கூடாது, அவனிடம் பழகக் கூடாது என பெண்களுக்கு அறிவுரை கூறுவதை விட ஆண் குழந்தைகளுக்கு பெண்களை தெய்வமாக மதிக்க வேண்டும். நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி கொடுத்தல் அவசியமாகிறது. அதைத்தான் சூர்யா தனது திரைப்படத்தில் கூறியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஜெய்பீமாக வாழ்ந்து தற்போது பெண்களை போற்றும் கண்ணபிரானாக நடித்த சூர்யா நிஜமாகவே எதற்கும் துணிந்தவன்தான்












Click it and Unblock the Notifications