கேடில் விழுச்செல்வம் கல்வி..கையறு நிலையில் தவித்த திருநங்கை மாணவி! இலவசமாக படிக்க வைக்கும் எத்திராஜ்
சென்னை: பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் வறுமையின் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் இருந்த திருநங்கை மாணவியை கண்டறிந்து எத்திராஜ் கல்லூரி சார்பில் இலவச சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பிகாம் எடுத்துள்ள நிலையில், தனது படிப்புக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்கள் எதிர்கால கனவை நிறைவேற்றும் வகையில் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
மருத்துவம் பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் கல்லூரிகளை அதிக அளவில் தேர்ந்தெடுத்து வருகின்றனர். போட்டி தேர்வு மற்றும் மத்திய அரசு பணிகளுக்கு தயாராகும் வகையில் கலைக்கல்லூரிகளில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதே நேரத்தில் குடும்ப வறுமை காரணமாக பல மாணவ மாணவிகள் தங்களது படிப்பை தொடர முடியாத அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேனியைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருந்த திருநங்கை மாணவிக்கு இலவசமாக சீட் வழங்கியிருக்கிறது சென்னை எத்திராஜ் கல்லூரி நிர்வாகம். தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவின் என்ற திருநங்கை பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு குடும்ப சூழல் மற்றும் வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க ஆர்வம் இருந்தும் கல்வி கட்டணம் செலுத்த வசதி இல்லாத காரணத்தால் உயர் கல்வி தொடர முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார்.
அவர் பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட சென்னை எழும்பூரை சேர்ந்த எத்திராஜ் கல்லூரி சேர்மன் அந்த திருநங்கை மாணவியை அழைத்து எங்கள் கல்லூரி சார்பில் இலவசமாக படிப்பதற்கு சீட்டு கொடுக்கிறோம் நீங்கள் விரும்பிய படிப்பை எடுத்துப் படிக்கலாம் என ஆபர் கொடுத்துள்ளார். அதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த திருநங்கை மாணவி தற்போது பிகாம் எடுத்துள்ளார்.
நன்கு படித்து எதிர்காலத்தில் சாப்ட்வேர் துறையில் சாதிக்க வேண்டும் என்பது தன்னுடைய எதிர்கால லட்சியம் என திருநங்கை மாணவி தெரிவித்துள்ளார். இந்த திருநங்கை மாணவிக்கு சீட்டு வழங்கும் நிகழ்வின் போது கல்லூரி சேர்மன் முரளிதரன் கல்லூரி முதல்வர் உமா கௌரி மற்றும் துணை முதல்வர் , உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள எத்திராஜ் கல்லூரியின் சேர்மன் முரளிதரன் பேசும்போது, பின்தங்கிய விளிம்பு நிலையில் இருக்கும் மகளிர் கல்வியின் மூலமாக உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தான் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரி தொடங்கப்பட்ட 78 ஆண்டுகளில் எவ்வளவோ மாணவிகள் இங்கிருந்து படித்து நல்ல நிலையில் உள்ளனர்.
சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள திருநங்கைகளும் உயர் கல்வி மூலமாக உயர வேண்டும் என்பதுதான் எங்கள் கல்வி நிறுவனத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications