திமுகவினரும் ரகசியமாக முருகன் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.. சொல்கிறார் தமிழிசை
சென்னை: திமுகவினரும் ரகசியமாக முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி மதுரையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள வண்டியூர் சுங்கச்சாவடி அருகில் இன்றைய தினம் மிகவும் பிரமாண்டமான முறையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் இரவு 8 மணி வரை மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நம்பிக்கையே இல்லாத அரசு முருகன் மாநாட்டை ஏன் நடத்தியது? தமிழுக்காக பாடுபட்டோம் எனச் சொல்லும் நீங்கள், தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா? ஏன் இந்த பாரபட்சம்? இரண்டாம் தர மக்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்த மாநாட்டை நடத்துவது இந்து முன்னணி என்றாலும், நாங்கள் கலந்து கொள்கிறோம். இந்த உணர்வு மேலோங்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் பங்கேற்கிறோம்.
முருக பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் ஒரு ஆன்மீகவாதி தான். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல என்று பொருள் கிடையாது. திமுகவினரும் ரகசியமாக இந்த மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
துரைமுருகன் முருக பக்தரா இல்லையா? முருக பக்தர்கள் மாநாடு தானே நடக்கிறது. எல்லா ஆன்மீகவாதிகளும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications