எம்ஜிஆர், ஜெயலலிதா கூட கோவில் நிதியில் கல்லூரி கட்டுனாங்க.. எடப்பாடிக்கு சேகர்பாபு சரமாரி பதிலடி
சென்னை: கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி? தொடங்கலாம், கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதை எதிர்த்த எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு சரமாரி பதிலடி கொடுத்துள்ளார்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், MGR, ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. எம்ஜிஆர் செய்ததும் சதிச் செயலா? அதிமுக தலைவர்களை இபிஎஸ் ஏற்கவில்லை என தெளிவாகத் தெரிகிறது.

பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்கி வருகிறது. சோழர்கள் காலத்தில் கூட கோவில் நிதி கல்விக்கு பயன்படுத்தப்பட்டது. உணவு, கல்வி, மருத்துவத்திற்கு அதிக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது 1000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் கல்விச்சாலையும், மருத்துவ சாலையும் மன்னர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகம் கோயில் கட்டடக்கலையை கொண்டு கட்டிக்கொள்ளலாம் என சட்டத்தில் இடம் உள்ளது. திருக்கோயில்கள் சார்பில் 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 22,455 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அறப்பணியுடன், அறியாமையை நீக்கும் கல்வி பணியையும் செயல்படுத்தி வருகிறது; வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு தான் கல்லூரிகளில் சேர இடம் அளிக்கப்படுகிறது.
அறநிலையத் துறை சட்ட விதிகளில் உள்ளதுபோலத்தான் கல்வி நிறுவனங்களை தொடங்கியுள்ளோம். திமுக ஆட்சியில் அரசு சார்பில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்; 19 திருக்கோயில்கள் மருத்துவமனைகளை தொடங்கி உள்ளோம். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோயில் நிதியில் கல்லூரிகள் இயங்குகின்றன.
சோழர் காலத்தில்கூட கல்விச் சாலை இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பாஜகவின் ஊதுகுழலாக இருந்து பேசுகிறார் பழனிசாமி; திட்டமிட்டு விஷ விதைகளை பரப்புகிறார். சங்க பரிவாரங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என பழனிசாமி பேசுகிறார். அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மருதமலை கோயில் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் பெரியபுள்ளான், அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கோயில் சார்பில் கல்லூரி வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளனர். வரலாறு தெரியாமல், சங்கிகள் வைக்கும் கோரிக்கையை இபிஎஸ் வெளிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த கல்லூரிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்தான் படிக்கின்றனர், என்பதை மறக்க வேண்டாம், என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
எடப்பாடி கோவில் நிதி பேச்சு
முன்னதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சில், கோவிலை பார்த்தாலே திமுகவிற்கு கண்ணு உறுத்தது. அதை பற்றி நான் சொல்ல கூடாது. சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும். நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கோவிலில் மக்கள் பணம் போடுகிறார்கள். கோவிலை விரிவுபடுத்த பணம் போடுகிறார்கள். மக்கள் கோயில்களின் உண்டியலில் பணம் செலுத்துவது, கோயிலை மேம்படுத்தவே. ஆனால், திமுக அரசு அனைத்து கல்லூரிகளையும் அரசுப் பணத்தில் கட்டாமல், அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் இது ஒரு சதிச்செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதை அரசுப் பணத்தில் செய்ய வேண்டும். கோயில் பணத்தை கல்விக்காக செலவு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பணம் இருப்பது திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அது அவர்களின் கண்களை உறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு கோயில்கள் மீது விருப்பம் இல்லாத காரணத்தால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் நாங்கள் கோவில் கட்டவில்லையா? சொல்லுங்கள். 10 கல்லூரிகளுக்குள் மேல் கட்டி உள்ளோம். ஆனால் நீங்கள் அப்படியா கட்டுகிறீர்கள். பல மக்கள் எங்களிடம் இந்த புகார்களை வைத்துள்ளனர். கல்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். கல்வி என்பது கண் மாதிரி. அதை அரசு கட்ட வேண்டும். அரசு சொந்த பணத்தில் கட்ட வேண்டும். கோவில் பணத்தில் கட்ட கூடாது. சொந்த பணத்தில் கட்டாமல் எப்படி கோவில் பணத்தில் கட்டுகிறீர்கள்.
இப்படி ஒரு அரசாங்கம் தேவையா? இதைத்தான் மக்கள் சதிச்செயலாக் பார்க்கிறார். இப்படி ஒரு அரசாங்கம் தேவையா என்று நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications