4 எம்எல்ஏக்கள், 2 எம்பி இருந்தும் கொடி கூட ஏற்ற முடியல.. நம்ம கிட்டதான்! நொந்து பேசிய திருமாவளவன்
சென்னை: 4 எம் எல் ஏக்கள், 2 எம்பிக்கள் இருந்தும் நம்மால் இன்னும் கொடி கூட ஏற்ற முடியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். கட் அவுட் கட்டினால் கூட உடனே வந்து அகற்றிவிடுகிறார்கள் என்றும், நம்ம கிட்ட மட்டும் சட்டம் பேசுவார்கள் என்றும் திருமாவளவன் வேதனையுடன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். இவரது கட்சி ஆளும் திமுக அரசோடு கூட்டணியில் உள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், நம்மிடம் 4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் இருந்தும் இன்னும் கொடி கூட ஏற்ற முடியவில்லை. நாம் கொடியேற்றும்போது தான் பெர்மிஷன் வாங்குனீங்களா என்று அதிகாரிகள் சட்டம் பேசுவார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

நம்மால் கொடியேற்ற முடியவில்லை
தொல் திருமாவளவன் கூறியதாவது:- சட்டமன்றத்தில் நமது பிரதிநிதித்துவம் அதிகரிக்கனும், நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவம் கூடனும்.. அப்போது தான் கவனிக்கப்படும். பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அரசியல் ரீதியாக நாம் வலிமை பெறப்போகும் போது தான், அதிகார வர்க்கத்தை நாம் செயல்பட வைக்க முடியும்.
இன்றைக்கு 4 எம் எல் ஏக்கள் வைத்து இருக்கிறோம். 2 எம்பிக்கள் வைத்து இருக்கிறோம்.. ஆனால் இன்னமும் கொடியேற்றுவதில் பிரச்சினை இருக்கு. அவ்வளவு எளிதாக நம்மால் ஒரு இடத்தில் போய் கொடியேற்ற முடியவில்லை.
நம்மிடம் மட்டும் சட்டம் பேசுவார்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றும்போது தான் அதிகாரிகள் சட்டத்தை பேசுவார்கள். பெர்மிஷன் வாங்குனீங்களா என்று.. ஆனா இத வேற எந்த இடத்திலேயும் போய் கேட்க மாட்டாங்க.. பேனர் வைத்தால் உடனே அதை கழட்டி விடுவார்கள். ஏனென்றால் நாம் அரசியல் ரீதியாக இன்னும் வலிமை பெற தேவை இருக்கிறது. இது போதாது என்ற போதாதையை காட்டுகிறது. அந்த வலிமையை நாம் பெற்றால் தான் இவற்றையெல்லாம் நாம் பெற முடியும்.
அம்பேத்கரின் சட்டம் அமல்படுத்தப்படவில்லை
புரட்சியாளர் அம்பேத்கர் கொண்டு வந்த அரசமைப்பு சட்டமே இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதே கசப்பான உண்மை. நாம் இந்த சட்டத்தை பற்றி பேசுகிறோம். அம்பேத்கர் சொன்ன சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலே இந்தியா இந்நேரம் சமத்துவம் உள்ள தேசமாக எப்போதோ பரிணாமம் அடைந்து இருக்கும். ஆனால் அதுவே இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தேர்தல் களத்தில், அரசியல் களத்தில் மட்டும் தான் அரசமைப்பு சட்டம் நடைமுறையில் இருக்கிறது.
ஆனால் சமூக, களத்தில் பண்பாட்டு களத்தில் அரசமைப்பு சட்டம் இன்றும் நடைமுறைக்கு வரவில்லை. சனாதன தர்மம் தான், வர்ணாசிரம தர்மம் தான் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications