அதிமுகவுடன் கைகோர்ப்பாரா தினகரன்... இதனால் லாபம் யாருக்கு... ஏமாற்றம் யாருக்கு!
சென்னை: பழைய கசப்புகளை மறந்து தினகரன் மீண்டும் அதிமுகவுடன் கைகோர்ப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினகரன் கசப்புகளை மனதில் வைத்து தனித்து போட்டியிட்டாலோ அல்லது வேறு கூட்டணிக்கு சென்றாலோ அது அவருக்கு எதிராகத்தான் முடியும். அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டுகள் அமமுகவுக்கு செல்லும்போது இது திமுகவுக்கு மிகப்பெரும் லாபமாக முடியும்.
தேவர் சமுதாய வாக்குகள் கொஞ்சம் அவர்கள் வசம் உள்ளது. ஆகவே அதிமுக-அமமுக இணையும்போது இந்த வாக்குகள் ஓன்றிணைந்து திமுகவுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது

அதிர்ச்சி கொடுத்த சசிகலா
அரசியல் களத்தில் எது எப்போது நடக்கும் என்று யாராலும் கணித்து விட முடியாது. சில ஆச்சரியங்களும் நிகழலாம். மேலும் சிலவகை, அதிர்ச்சியையும் கொடுக்கலாம். அப்படி ஒரு எதிர்பாராத அதிர்ச்சிதான் அனைவருக்கும் நேற்று இரவு ஏற்பட்டு இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அரசியல் விலகல் அறிவிப்புதான் அது. ஜெயலலிதா மறைந்த பின்னர் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறிவிட்டார் சசிகலா.

றெக்கை கட்டி பறந்த யூகங்கள்
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றது முதல் பெங்களூரு சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றார் என்ற தகவல்கள் வரை பரபரப்பை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டிருந்தார் சசிகலா. சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றி, பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்து முதல்வர் வேட்பாளராக அவரே ஒருவரை தேர்ந்தெடுப்பார் என்று யூகங்கள் றெக்கை கட்டி பறந்தன. அதிமுக கொடியுடன் சசிகலாவின் பெங்களூரு டூ சென்னை பயணம் இதை உறுதிப்படுத்தியது.

அமமுக-அதிமுக கைகோர்க்குமா?
அதன்பின்னர் சென்னை வந்தவுடன் அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி என்பதுபோல் இருந்த சசிகலா, பறந்து வந்த யூகங்களுக்கு எல்லாம் நிரந்தர அமைதி கொடுத்து விட்டார். அவரது அமைதி யாருக்கு விரக்தியை ஏற்படுத்தியதோ இல்லையோ தினகரனுக்கு பெரும் விரக்தியை கொடுத்து விட்டது. சசிகலாவை வைத்து அமமுகவை வெற்றி படிகளில் கொண்டு செல்ல நினைத்த தினகரனுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. பழைய கசப்புகளை மறந்து தினகரன் மீண்டும் அதிமுகவுடன் கைகோர்ப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

லாபம் யாருக்கு
இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு ஏமாற்றம் என்பதை பார்ப்போம்? அமமுகவுக்கும் கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது. தேவர் சமுதாய வாக்குகள் கொஞ்சம் அவர்கள் வசம் உள்ளது. ஆகவே அதிமுக-அமமுக இணையும்போது இந்த வாக்குகள் ஓன்றிணைந்து திமுகவுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களே அமமுகவில் உள்ளதால் தேர்தல் பணியிலும் எந்தவித தயக்கமும் இருக்காது. தேர்தல் முடிந்தவுடன் தனக்கு முக்கிய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதை முன்வைத்து கூட தினகரன் அதிமுகவுடன் கட்சியை இணைக்கலாம்.

முடிவு எடுப்பாரா தினகரன்?
ஆனால் தினகரன் கசப்புகளை மனதில் வைத்து தனித்து போட்டியிட்டாலோ அல்லது வேறு கூட்டணிக்கு சென்றாலோ அது அவருக்கு எதிராகத்தான் முடியும். அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டுகள் அமமுகவுக்கு செல்லும்போது இது திமுகவுக்கு மிகப்பெரும் லாபமாக முடியும். கடந்த தேர்தல்களில் அதிமுக ஓட்டுகள் பிரிந்து அமமுகவுக்கு சென்றது கண்கூடாக தெரிந்தது. அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்று இ.பி.எஸ் அன்ட் கோவுக்கு சசிகலாவே ஆதரவு கரம் நீட்டியுள்ள நிலையில் தினகரன் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. நாம் முதலில் கூறியதுபோல் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications