ஓவர்.. ஓவர்.. என்ன எல்லாம் முடிஞ்சிருச்சா? “இனி தான் ஆட்டம் ஆரம்பம்”.. கொளுத்திப்போடும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் வெல்லமுடியாது. எல்லாம் முடிந்துவிட்டது என்பது உண்மையில்லை. இனிதான் ஆட்டம் ஆரம்பம் எனத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
அதிமுக பொதுச்செயலாளா் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 28ஆம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர்.

தீராத போராட்டம்
இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை நடத்தலாம். அதற்குரிய தேதியை தெரிவிக்கும்படி இது தரப்பையும் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஓபிஎஸ் அணியினர், கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடப்பதாகவும், தங்கள் ஆதரவாளர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால், தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர். ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஈபிஎஸ் தரப்பினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

பொதுக்குழு ஆடுகள்
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "பொதுச் செயலாளராக தொண்டர்கள் தேர்வு செய்து கொண்டாடி மகிழ்ந்த தலைமை தான் அன்றைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்னும் சாஸ்வத சரித்திரங்கள் என்றால்.. இன்றோ.. தொண்டர்களின் உரிமையை பறித்து விட்டு பொதுக்குழு என்னும் புறவாசல் வழியே கழகம் எனும் ஆலயத்தை கைப்பற்றி விட்டதாகவும்.. தொண்டர்களுக்கு பதிலாக தனது பணப் பண்ணையில் தீனி போட்டு தான் வளர்த்த பொதுக்குழு ஆடுகள் தனக்கு பொதுச் செயலாளர் பதவியை தந்துவிட்டதாகவும்.. கூடவே நீதிமன்றமும் தன்னை பொதுச் செயலாளராக நியமித்து விட்டதாகவும் எடப்பாடி என்னும் பதவிப் பைத்தியம் தனக்குத் தானே ஒரு சுயபட்டாபிஷேகம் நடத்திக்கொண்டு.. எம்ஜிஆரை போல மாறுவேடம் போட்டு பித்தலாட்டத்தின் உச்சத்தில் நிற்கிறது..

சிலுவம்பாளையத்து சார்லி சாப்ளின்
இந்த அசிங்கமான அபகரிப்பை நடத்தி முடிக்க ஊடகக் கூலிகள் சிலரையும் வாய் வாடகை காரர்கள் பலரையும் அமர்த்திக் கொண்டு தான் நினைத்ததை சாதித்து விட்டதாக அது நினைக்கிறது. மேலும் விரும்புவதை விரும்புகிற வடிவத்தில் விரும்புகிற நேரத்தில் எதையும் பெற்றுக் கொடுக்கும் அமானுஷ்ய சக்திகள் தன்னிடம் இருப்பதாகவும் அது ஆணவத்தில் குதிக்கிறது.. ஆனால் இதே அண்ணா தி.மு.க.வுக்கு ப.உ.சண்முகம், ராகாவானந்தம், நாவலர் நெடுஞ்செழியன், அன்னை ஜானகி ராமச்சந்திரன் திருநாவுக்கரசு, சசிகலா போன்றோர் எப்படி பொதுச்செயலாளராக வந்தாலும் தொண்டர்களால் தேர்வு செய்யப்படாத அவர்கள் எப்படி ஒரு இடைவேளை கதாபாத்திரங்கள் ஆனார்களோ அதே போன்று இன்னும் சொல்லப் போனால்.. அதற்குக் கூட பொருந்தாத ஒரு ஒரு காமெடிக் கூத்தை தான் சிலுவம்பாளையத்து சார்லி சாப்ளின் நடத்தி வருகிறார் என்பதே உண்மை..

முடிவுக்கு வந்துவிடும்
எங்கே ஒரு நீதிதேவதை முழுமையாக எம்.ஜி.ஆர் வகுத்து விட்டுப்போன கட்சியின் மாற்றக் கூடாத விதிகளை கண் கொண்டு பார்க்கிறதோ எங்கே ஒரு நீதி தேவதையின் செவிகளில் கழகத் தொண்டர்களின் உரிமைக்குரல் முழுமையாக கேட்கிறதோ அன்று எடப்பாடியின் ஒட்டுமொத்த அபகரிப்பு அரசியலும் முடிவுக்கு வந்துவிடும் என்பது சத்தியம்.. அது விரைவில் முன்னெடுக்க இருக்கிற
மேலமை நீதிமன்றங்களில் அல்லது தேர்தல் ஆணையத்தில் அது நடந்தே தீரும் என்பது திண்ணம். ஆக.. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாரதியார் வேஷம் தொடங்கி சில தருணங்களில் பிச்சைக்காரன் வேசம் வரை போட்டு ரசிப்பது போல எடப்பாடி பழனிசாமியின் டெண்டர் கும்பல் தங்களது குபேரக்கடவுளான எடப்பாடிக்கு பொதுச் செயலாளர் வேஷம் கட்டிப் பார்க்கிறது என்பதை கழகத் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இனிதான் ஆட்டம் ஆரம்பம்
எனவே பூச்செண்டுகளை தாங்களே ஏற்பாடு செய்து.. வாழ்த்துகளை தாங்களே வரவழைத்து விட்டு வாழ்த்துக்கள் குவிவதாக வர்ணனை செய்வது.. சில கையேந்தி பவன் தலைவர்களை வரவழைத்து அவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பதாக மாயாஜாலம் காட்டுவது என தரைப்பாடி கும்பல் நடத்துவது எல்லாமும் பக்கா மோசடிகள் என்பதை கழகத் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. எனவே எல்லாம் முடிந்தது என எவராவது சொன்னால் அவர்களிடம் இனி தான் ஆட்டம் ஆரம்பம் என நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்க.. ஆம்.. எடப்பாடி ஒரு போதும் அ.தி.மு.கவுக்கு பொதுச் செயலாளர் ஆக முடியாது.. மனித சக்தி கடந்த மகாசக்திகள் அமர்ந்த அந்த மகோன்னத ஆசனத்தில் ஒரு போதும் எடப்பாடி எனும் மனசாட்சி இல்லாத துரோகியால் அமரவே முடியாது.. இது நிச்சயம்.. இதுவே சத்தியம்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications