ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை எப்படி உள்ளது? நேரில் சந்தித்த பிறகு காங்.நிர்வாகி சொன்ன தகவல்
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும் எங்களுக்கு ஆறுதல் கூறும் அளவுக்கு நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் காஞ்சிபுர மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்த காஞ்சிபுர மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிவராமன், ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எங்களுக்கு ஆறுதல் கூறும் அளவுக்கு அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

எம்எல்ஏவாக பதவியேற்பு
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை தவிர்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களுமே டெபாசிட் இழந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 10-ந் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார்.

மூச்சு விடுவதில் சிரமம்
இதையடுத்து நேற்று டெல்லி சென்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து விட்டு நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய சில மணி நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்ததால் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி ஈரோடு கிழக்கு தொகுதியிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு காஞ்சிபுர மாவட்ட முன்னாள் செயலாளர் சிவராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேரடியாக சந்தித்து பேசினோம்
அப்போது அவர் கூறியதாவது: - ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்தித்து விட்டு மாலை 4.30 மணியளவில் விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பினார். சாதாரண நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவரை ஒருநாள் வைத்து பரிசோதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரடியாக சந்தித்து பேசினோம்.

எங்களுக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு
நன்றாக பேசிக்கொண்டு இருக்கிறார். நன்றாக உள்ளார். நாளை (இன்று) அல்லது அதற்கு அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விடுவோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு ஏற்கனவே வீசிங் பிரச்சினை உள்ளது. நன்றாக இருக்கிறேன். இந்த நேரத்தில் ஏன் வந்தீர்கள். விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று எங்களுக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு தைரியமாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications