நிவாரணப் பணிகளில் ராம் மோகன் ராவ் பாசறை... தெலுங்கு பேசும் மக்களை வளைக்கும் பணி
சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் பாசறை சார்பில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அண்மையில் கூட திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு ராம் மோகன் ராவ் ஏற்பாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. அரசாங்கத்தில் உச்ச பதவிகளில் இருந்துவிட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ள ராம் மோகன் ராவ் சமுதாயம் சார்ந்த பணிகளில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தனது பெயரில் இயங்கும் பாசறையின் கீழ் தெலுங்கு பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் பணியை அவர் கையில் எடுத்துள்ளார். மதுரை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை கூட அவர் நடத்தியிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ராம் மோகன் ராவ் 1985-ம் ஆண்டு ஐ ஏ எஸ் பேட்ஜ்ஜை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றி இறுதியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியை தொட்டவர். இவர் தலைமைச் செயலாளராக இருந்த போது தான் ஜெயலலிதா மரணம், சசிகலா சிறைவாசம், தலைமைச் செயலாளர் வீட்டிலேயே ரெய்டு, என பல முக்கிய நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறின.
தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ். வாய் திறக்காததால், ''அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா.. இப்போது உள்ளவர்களுக்கு அதைப்பற்றி பேச துணிச்சல் இல்லை'' என விளாசினார். பின்னர் தலைமைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அதிகாரமில்லாத டம்மி பதவிக்கு மாற்றப்பட்ட சில மாதங்களில் ஓய்வு பெற்று விட்டார் ராம் மோகன்.
தனக்கு இக்கட்டு நேர்ந்த காலத்தில் தனது சமுதாய பிரமுகர்கள் மட்டுமே பக்கபலமாக இருந்ததால் அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கச்செய்வேன் என சூளுரைத்து இப்போது அதற்கான பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார் ராம் மோகன் ராவ். அந்த வகையில் தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய இடங்களை பட்டியலிட்டு அங்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு தனது பாசறை நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே ராம் மோன ராவ் ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு அரசியல் ஆலோசகராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications