விஜய்க்கு 121 சீட்டில் வெற்றியா? மாஜி டிஜிபி கணித்தால் சரியா இருக்குமா? கொந்தளித்த திருமாவளவன்
சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி ரவி ஐபிஎஸ் நடத்திய எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 41 சதவீத வாக்குகள் பெற்று 121 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார். அதற்கு திருமாவளவன், முன்னாள் டிஜிபி என்பதாலே அவர் சொல்வது சரியாகிவிடுமா? என கேள்வி எழுப்பி உள்ளதோடு, விஜய் பெயரில் ஏராளமாக சூதாட்டம் நடக்கிறது என சாடியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. நாளை காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது. அதன்பிறகு காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனால் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? அடுத்த முதல்வர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
விஜய் பெயரில் சூதாட்டம்
அப்போது அவரிடம் தேர்தல் கருத்து கணிப்புகள் விஜய்க்கு சாதகமாக வருவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திருமாவளவன், ''விஜய் பெயரில் ஏராளமான சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்ட கும்பல் பரப்புகிற வதந்தி தான் இது.
தேர்தலுக்கு முன்பு திமுகவை வைத்து சூதாட்டம் நடத்தினார்கள். தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்பு விஜய்யை முன்வைத்து சூதாட்ட காய்களை நகர்த்துகிறார்கள். இந்த சூதாட்டம் அகில உலக அளவில் நடக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் ஏமாந்து போவார்கள்?'' என்றார்.
மாஜி டிஜிபினா சரியா இருக்குமா?
இதையடுத்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கருத்து கணிப்புகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திருமாவளவன், ''முன்னாள் டிஜிபி என்பதால் அது சரியாகிவிடுமா?. இது 100 சதவீதம் சூதாட்டம் தான். சூதாட்டத்துக்கான மீடியா ஹைப் தான் இது. நாளை தேர்தல் முடிவு வரப்போகிறது. பாருங்கள்.
திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்
40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நான் பிரசாரம் செய்துள்ளேன். எங்களின் தொகுதி 8 என்றால் தோழமை கட்சி வேட்பாளர்களின் தொகுதிகளில் நான் பிரசாரம் செய்துள்ளேன். நேரடியாக பார்த்த வகையில் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்? என்பது தெரியும். தேர்தலில் நேரடியாக களத்தில் கண்ட அனுபவத்தில் இருந்து நான் சொல்கிறேன். இந்த தேர்தலில் நான் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்'' என்றார்.
மாஜி டிஜிபியின் கணிப்பு ரிசல்ட் என்ன?
முன்னதாக தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவி ஐபிஎஸ் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு எக்ஸிட்போல் கருத்து கணிப்பை நடத்தினார். 234 தொகுதிகளிலும் முன்னாள் காவல் அதிகாரிகளை வைத்து மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்டு அவர் இந்த கருத்து கணிப்பை நடத்தினார். அதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 41 சதவீத வாக்குகளுடன் 121 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்று கூறியிருந்தார். இதுபற்றி கேட்டதற்கு தான் திருமாவளவன் இப்படி பதில் அளித்துள்ளார்.














Click it and Unblock the Notifications