ஒற்றைத் தலைமை.. நான் பன்னீர் பக்கமும் இல்லை, பழனிச்சாமி பக்கமும் இல்லை.. ஜெயக்குமார் பளீச்!
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கடந்த 7 நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோர் வீடுகளில் மூத்த நிர்வாகிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொதுக் குழுவுக்கு இன்னும் இரு தினங்களே இருப்பதால் அதிமுகவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை விரும்புகிறார்கள். ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம், நாங்கள் அந்த ஒற்றைத் தலைமை யார் என்று கூறவே இல்லையே. நான் பன்னீர் செல்வம் பக்கமும் இல்லை, எடப்பாடி பக்கமும் இல்லை. கட்சி பக்கம்தான் இருப்பேன்.

சீட்டுக்காகவா
ராஜ்யசபா தேர்தலில் சீட் கொடுக்காததால் நான் இப்படி செய்வதாக சொல்வது வதந்தி. கட்சியிலும் ஆட்சியிலும் எனக்கு ஜெயலலிதா எத்தனையோ பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு என்னிடம் நிருபர்கள், "ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் இரு அணிகளும் இணைந்தால் நிதித்துறை அமைச்சர் பதவியை ஓபிஎஸ்ஸுக்கு விட்டுத் தருவீர்களா" என கேட்டனர்.

பதவியை விட்டுக் கொடுத்தேன்
நானும் ஆம் என கூறி, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தவுடன் விட்டுத் தந்தேன். எனக்கு பதவி ஆசை இல்லை. திமுக எனும் தீயசக்தியை எதிர்ப்பதற்காகவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அதையே நாங்கள் வாழ்நாள் கொள்கையாகவும் குறிக்கோளாகவும் கொண்டுள்ளோம்.

ஓரம் கட்டும் எண்ணம் இல்லை
அதிமுகவில் பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. ஒற்றைத் தலைமை குறித்து பொதுக் குழுவே முடிவு எடுக்கும். அதிமுக பொதுக் குழு திட்டமிட்டபடி நடைபெறும். சிறையிலிருந்து நான் வெளியே வந்தவுடன் என்னை பார்க்க இரு அண்ணன்களான எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் வந்தனர் என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications