எடப்பாடி அறிவித்த அதிமுக பொறுப்பாளர் பட்டியலில் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பெயர் மிஸ்சிங்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்த அதிமுகவின் மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது அக்கட்சியில் கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் பிற மாவட்ட செயலாளர்கள் பெயரும் இல்லாததால் இதில் உள்நோக்கம் இல்லை என்கிறார்கள் அதிமுகவினர்.
அண்ணா திமுக ஏற்கனவே சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றன. டிடிவி தினகரன், தனிக்கட்சியையே நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன்.

மேலும் அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி அந்த நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையன், சசிகலாவின் தூண்டுதலில்தான் இப்படி பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டி வந்தது.
இன்னொரு பக்கம், அதிமுக ஒன்றிணைய தடையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மூலம் நெருக்கடி தரப்படும்; எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்; அப்போது செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளராக்கப்படக் கூடும் என்கிற தகவல்களும் றெக்கை கட்டிப் பறந்தன.
இந்த நிலையில் அதிமுகவில் உள்ள 82 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இன்று அறிவித்தார். இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 82 மாவட்ட பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் இதுவரை ஒதுங்கி இருந்த அதிமுக தலைவர்கள் பலரது பெயரும் கூட இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மாவட்ட செயலாளராக இருக்கக் கூடிய எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் பெயர் மட்டும் இடம்பெறவில்லை. ஆனால் பிற மாவட்டச் செயலர்கள் பெயர்களும் இடம்பெறவில்லை என்பதால் செங்கோட்டையனை ஒதுக்கியதாக கூறுவது தவறு என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications