வடிவேலு காமெடி பார்த்திருக்கீங்களா.. அப்படித்தான் திமுக ஆட்சி நடக்கிறது.. கலாய்ப்பது செல்லூர் ராஜு
சென்னை: திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக அரசைக் கடுமையாகச் சாடினார்.
Recommended Video
கடும் விலைவாசி உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக இன்று பெத்தானியாபுரம் பகுதியில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட நிலையில், திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொய் வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு தற்போது ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் வகையில் சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளதாக அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வடிவேலு
தொடர்ந்து மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, "வடிவேலு காலையில் பயபக்தியுடன் கிளம்பும்போதும் இரவில் மதுபானம் அருந்திவிட்டு வருவது போல இருக்கும். அதேபோல வாக்கு சேகரிக்கும் போது பயபக்தியுடன் வந்த திமுக தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்துகொண்டு மக்கள் நலனில் அக்கறை காட்டாது உள்ளது . தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி ஒன்று ஆனால் நடப்பது ஒன்றாக உள்ளது.

கார்பரேட் அமைச்சர்
திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்கிறது. கார்பரேட்டில் வேலை செய்த மதுரையைச் சேர்ந்தவர் அமைச்சராக உள்ளார். அவருக்கு ஏழை, எளிய மக்கள் நிலை தெரியுமா? அதனால் தான் விலை வாசி உயர்ந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் அப்படி நடக்கவில்லை. பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்தோம். யாரும் பசியோடு இருக்க வேண்டாம் எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்தோம்.

அதிமுக ஆட்சி
எம்ஜிஆர் எப்படி சத்துணவு கொண்டு வந்தாரோ, அதைப் போல் ஜெயலலிதா ஆட்சியில் அம்மா உணவகம் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொங்கலுக்குப் பணம், பொருள் என மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் வழங்கினோம். ஜெயலலிதா கொடுத்த சாதனை திட்டத்தால் தான் பல முறையில் ஆட்சிக்கட்டில் அமர்ந்தார். அதைப்போல் எடப்பாடி பழனிசாமி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினார்.

திமுக வாக்குறுதிகள்
நகைக் கடன் தள்ளுபடி செய்வோம். அதைச் செய்வோம் எனச் சொல்லிவிட்டு மக்களை ஏய்த்துவிட்டனர். வரி உயர்வை தி.மு.க அரசு அதிகப்படுத்தியுள்ளது. திமுகவினர் குடும்பத்தோடு சுற்றுலா சென்றீர்கள். நீட் தேர்வு விலக்கு, 7 பேர் விடுதலை என்ன ஆச்சு? பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் எனக் கூறிவிட்டு சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் இலவசம் என்கிறார்கள். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பசி பட்டினி தான் ஏற்படும்.

மதுரைக்காரனை மட்டும் கிண்டலா
தெர்மாகோல் திட்டம் செயல்படுத்திய விதத்தில் தான் தவறு, அதைக் கிண்டல் செய்தார்கள். ஆனால் மின் கம்பிகளில் அணில் செல்வதால் மின்வெட்டு என்று திமுக அமைச்சர் கூறியது எல்லாம் கிண்டல் ஆகவில்லை. மதுரைக்காரர்கள் சொன்னால் அதற்கு மட்டும் கிண்டலா? தி.மு.க ஆட்சியில் பாலியல் தொல்லை, கட்ட பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது. போலீஸுக்கே தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. மக்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications