சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ்.. தென் மாவட்டங்களில் அப்லாஸ் அள்ளிய ஸ்டாலின்.. பாராட்டிய கருணாஸ்
சென்னை: சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொள்வதாக முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவரும் திருவாடாணை தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான சேது. கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Denotified Communities (சீர்மரபினர்) பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. அன்றைய அ.தி.முக. அரசு DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டது.

ஆனால் மத்திய அரசு சலுகைகள் பெறுவதற்கு ஒரு பெயரும், தமிழக ஆவணங்களிலும் ஒரு பெயரும் கூடாது. அனைத்து சலுகைகளையும் பெற சீர்மரபின பழங்குடியினர் DNT என்று ஒரே மாதிரியாக மாற்றம் செய்தால்தான் எங்களது தொடர் கோரிக்கை முழுமையாக நிறைவேறும்.
அதே சமயம் இந்த இரு முரண்பாடுகளானவற்றையும் களைய வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் அன்றே கோரிக்கை விடுத்தேன். தற்போது சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள முதல்வர் அவர்களுக்கு நன்றி" என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என்ற இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே இதை முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் எந்த வித புதிய அறிவிப்புகளும் அறிவிக்கக் கூடாது என்பதால் அவர் இவ்வாறு செய்திருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008இல் அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
பின்னர், அரசாணை (நிலை) எண்.26, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் இடஒதுக்கீடு (20% reservation) மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNC) என அழைக்கப்படுவர், எனவும் ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNT) என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி, இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபின வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications