சீமான் வீட்டு காவலாளியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மாஜி ராணுவ வீரர் சங்கம் புகார்
சென்னை: 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். மேலும் பிரவீன் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காஷ்மீர் முதல் அனைத்து மாநிலங்களிலும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் விசாரணை நடத்தி 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் பெங்களூரில் வசிக்கும் நடிகை வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கூறிய தகவலை போலீசார் பதிவு செய்தனர். அதன்பிறகு நேற்று இரவு சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
போலீசாரின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
முன்னதாக விசாரணைக்கு ஆஜராகக்கோரி சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டில் பாதுகாவலராக பணியாற்றி வரும் முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பணிக்கு இடையூறு செய்ததாக கூறி பாதுகாவலர் அமல்ராஜ், சீமானின் உதவியாளர் சுபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தான் முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜை தாக்கிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய முப்படை மற்றும் துணை ராணுவப்படை முன்னாள் வீரர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் பாபு சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் பாதுகாவலராக அமல்ராஜ் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய ராணுவத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர். முன்னாள் ராணுவ வீரரான அவர் தன் கடமையை செய்தார். ஆனால் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் கடுமையாக தாக்கியுள்ளார். முன்னாள் ராணுவ வீரர் என்று சொன்ன போதும், தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். துப்பாக்கியை எடுத்துக் கொடுக்க முயன்ற அமல்ராஜ் மீது அபாண்டமான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சட்ட ரீதியாக அனுமதி பெற்றே, அமல்ராஜ் துப்பாக்கி வைத்திருந்தார். பிரவீன் ராஜேஷ், இதற்கு முன் பணிபுரிந்த இடங்களிலும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார். மனிதத் தன்மையற்று, அமல்ராஜின் கண்களை குத்தி, கொடூரமாக தாக்கிய பிரவீன் ராஜேஷ் மற்றும் அவருடன் இருந்த போலீசார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
அதன்பிறகு சுரேஷ் பாபு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛சீமான் வீட்டில் பாதுகாவலராக உள்ள அமல்ராஜ் ராணுவத்தில் பணியாற்றினார். சம்மனை ஒட்டிய பிறகு அதில் உள்ள அம்சத்தை படித்த பிறகு தான் கிழிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் அவரை தாக்கி உள்ளார். முன்னாள் ராணுவ வீரராக அனைத்து பயிற்சிகளையும் அவர் பெற்றவர். துப்பாக்கி வைத்திருந்தார். ஆனால் போலீசார் தாக்கியபோது அவர் திரும்ப தாக்கவில்லை.
தன்னிடம் துப்பாக்கி உள்ளது என்று கூறி அதனை எடுத்து கொடுத்துள்ளார். தகராறில் துப்பாக்கியில் இருந்து திடீரென்று குண்டு வெளியே வந்துவிடக்கூடாது என்று அவர் அதனை செய்தார். காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். பிரவீன் ராஜேஷ் மீது எடுக்கும் நடவடிக்கையில் திருப்தி இல்லாவிட்டால் காஷ்மீர் முதல் அனைத்து மாநில தலைவர்களுடன் பேசி உள்ளேன். நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications