இந்த ஆண்டின் கடைசி சூப்பர்மூன் இன்று.. சென்னையில் "இரட்டை வானவில்".. வாவ், வானில் ஆச்சரியம் பாருங்க
சென்னை: இந்த ஆண்டின் இறுதிப் பெருநிலவை (Supermoon) இன்று வெள்ளிக்கிழமை இரவு காணலாம்.. அதன்படி, இன்று நவம்பர் 15ம் தேதி, பூமியிலிருந்து ஏறக்குறைய 360,000 கிலோமீட்டர் தொலைவில் நிலா இருக்கும் என்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
ஆங்கில காலண்டர்படி, ஒவ்வொரு மாதத்திலும் தோன்றும் பௌர்ணமிக்கு தனித்துவமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், நவம்பர் மாதப் பெருமுழு நிலவுக்கு "பீவர்ஸ் மூன்" என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இது ஒரு சூப்பர் மூன் ஆகும்..
சூப்பர் மூன்: பூமிக்கும் நிலவுக்குமான சராசரி தொலைவு 3.84 லட்சம் கி.மீ., பூமியை நிலவு சுற்றி வரும் சுற்றுவட்ட பாதை வட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருக்கிறது. இதனால் நிலவு சில நேரம் பூமிக்கு நெருக்கமாகவும் வரும், சில நேரம் தூரமாகவும் சென்றுவிடும். நெருக்கமாக வருவதை 'பெரிஜி' எனவும், தூரமாக செல்வதை 'அபோஜி' எனவும் சொல்கிறார்கள். இப்போது பெரிஜி நிகழ்வின்போது பௌர்ணமி வந்தால் அதாவது முழு நிலவு வந்தால் அதை 'சூப்பர் மூன்' என்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 3-4 சூப்பர் மூன் நிகழ்வுகள் நடக்கும். இந்த நிகழ்வின் போது நிலவு பூமிக்கு நெருக்கமாக இருப்பதால், நிலவு வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% வெளிச்சமாகவும் இருக்கும்.
கடைசி பெருமுழு நிலவு: வழக்கமாக, சூப்பர் மூன்கள் வருடத்துக்கு 3-4 முறை நடக்கக்கூடியவை. அந்தவகையில், இன்று நவம்பர் 15ல் இந்த வருடத்தின் கடைசிப் பெருமுழு நிலவாகும்.. இந்த ஆண்டு நவம்பர் மாத முழு நிலவு, பெருமுழு நிலவாகவும் அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது.
சிங்கப்பூர் வானில் மாலை 6.45 மணியளவில் நிலவு தென்படும்.. கிட்டத்தட்ட இரவு 7 மணிக்குப் பிறகு இதனை நன்றாகவே காணமுடியும்... சூரியன் மறைந்த பிறகு திறந்தவெளி பகுதிகளிலிருந்தும் இந்த இறுதிப் பெருமுழு நிலவை காணலாம்.
இன்றைய நிகழ்வை தவறவிட்டால், மீண்டும் பெருமுழு நிலவை காண்பதற்கு, சிங்கப்பூரர்கள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமாம்.. அதாவது, 2025 அக்டோபரில்தான் அடுத்த பெருமுழு நிலவை காண முடியும் என்கிறார்கள்.
இரட்டை வானவில்: இதனிடையே சென்னையில் ஒரு அரிய நிகழ்வு நடந்துள்ளது.. நேற்றைய தினம் "இரட்டை வானவில்" வானில் தென்பட்டுள்ளது.. வழக்கமாக, சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச் சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வானவில் தோன்றும்.. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என 7 வண்ணங்களில் வில்போல் வளைந்து, இந்த வானவில் தோன்றும்.
ஆனால், இரட்டை வானவில் என்பது அபூர்வமானது.. அதாவது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது. இரட்டை வானவில் தோன்றும்போது 2வது வானவில்லில் ஊதா நிறம் வெளியேயும், சிவப்பு நிறம் உட்புறமாகவும் இருக்கும்.. இப்படியொரு காட்சியைதான் சென்னைவாசிகள் நேற்று பார்த்திருக்கிறார்கள்.
சாரல் மழை: நேற்று சென்னையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது.. அப்போது தூறிய சாரல் மழைக்கும், மிதமான வெயிலுக்கும் இடையே, வானில் இந்த இரட்டை வானவில்லை கண்டு ஆச்சரியப்பட்டு போனார்கள்.. இதற்கு முன்பு, சென்னையில் இரட்டை வானவில் கடந்த மே 16, ஜூன் 10 ஆகிய தேதிகளிலும், கோவையில் ஜூன் 8-ந் தேதியும், பெங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7- தேதியும் தோன்றியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications