சொந்த ஊருக்குச் செல்லும் குழந்தையின் குதூகல மனநிலை! டெல்டா டூர் பற்றி முதல்வர் பரவசம்!
சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருந்தாலும் கூட, இந்த முறை சொந்த ஊருக்குச் செல்லும் குழந்தையின் குதூகல மனநிலையுடன் புறப்பட்டதாக கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தனது 4 நாள் டெல்டா மாவட்ட டூர் பற்றி தொண்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துகொண்ட தகவல் வருமாறு;

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, மக்கள் காட்டிய அன்பையும் கழகத்தினர் அளித்த வரவேற்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறேன்.
முதலமைச்சர் என்ற முறையில் டெல்டா மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருந்தாலும், இந்த முறை 4 நாட்கள் தொடர்ச்சியான பயணம் என்றபோது, சொந்த ஊருக்குச் செல்லும் குழந்தையின் குதூகல மனநிலையுடன்தான் புறப்பட்டேன்.
நமது அரசு அறிவித்த திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை உறுதி செய்யும் ஆய்வுப் பணிகள், திருமண நிகழ்வுகள், ஆதீனகர்த்தருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நான் பங்கேற்றதைச் செய்திகள் வாயிலாகப் பலரும் அறிந்திருப்பீர்கள்.
இந்தப் பயணத்தில் மிக முக்கியமான நிகழ்வு என்பது, அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட' விரிவாக்கமாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளில் மதுரையில் இதனைத் தொடங்கி வைத்தேன்.
அதனைத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து, 30 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் ஆகஸ்ட் 25-ஆம் நாள் மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
குழந்தைகள் தெம்புடன் பாடங்களைக் கவனிக்கும் வகையில் சத்தான காலை உணவு, அவர்களது அன்னையரின் பணிச்சுமையைக் குறைக்கின்ற பொறுப்பு, பெற்றோரின் நிலை உணர்ந்து தாயுள்ளத்துடன் அரசாங்கமே குழந்தைகளின் நலனில் காட்டுகின்ற அக்கறை, தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறை உடல்நலத்துடன் அறிவு வளர்ச்சி பெற்றிடுவதற்கான கட்டமைப்பு எனக் காலை உணவுத் திட்டம் பலராலும் பாராட்டப்படுகின்ற திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications