Exclusive: டென்ஷன் ஆன எடப்பாடி.. அமித் ஷா சந்திப்புக்கு காரணம் விஜய்? போட்டு உடைக்கும் சீனியர்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சந்திப்புக்கு ஒரு முக்கிய காரணம் தவெக தலைவர் விஜய் தான் என நமக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ்.
2026 சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணி கணக்குகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் தான் டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த மீட்டிங் முடிந்ததுமே அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அதிரடி ட்வீட் வந்தது. ஆனால், கூட்டணி குறித்து மழுப்பலாகவே பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ், நமது ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அது இங்கே..

கேள்வி: அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முடிவடைந்ததுமே, தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா ட்வீட் செய்தார். எடப்பாடி பழனிசாமி கூட்டணி பற்றி பேசவில்லை என்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ராஜகம்பீரன் அப்பாஸ்: தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அதிமுகவை விட்டால் வேறு வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் சவலைப் பிள்ளையாக இருக்கிறது பாஜக. அதை தூக்கிச் சுமப்பதற்கான தோள்கள் அதிமுகவிடம் இருக்கிறது. அதிமுகவின் கட்டமைப்பு, தொண்டர்கள் பலம் அசாதாரணமானது. தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் அதிமுக அளவுக்கு வேறு பலமான கட்சி இல்லை.
அதிமுகவுக்கு ரிசல்ட் வரல
பாஜக எதிர்ப்பு ஓட்டுகளைப் பெறுவதில் திமுக கூட்டணி முதன்மையாக இருக்கிறது. பல ஆண்டுகளாகவே மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்த்து கூட்டணியில் நீடிக்கின்றன. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாலேயே பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக பக்கம் சாய்ந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.
பாஜகவின் பல மசோதாக்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு அதிமுக ஆதரவு தெரிவித்ததன் விளைவாக அதிமுகவின் இமேஜ் சரிந்துவிட்டது. மோடியா லேடியா எனக் கேட்ட ஜெயலலிதாவின் துணிச்சலை அதிமுக இழந்துவிட்டது. அதிமுகவின் தனித்தன்மையை இழந்துவிடும் என அஞ்சி கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள். ஆனால், தேர்தலில் அதற்கான ரிசல்ட் கிடைக்கவில்லை. 2ஆம் இடத்தைக் கூட அதிமுகவால் தக்கவைக்க முடியவில்லை. பல இடங்களில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது அதிமுக.
பாஜகவுடன் சமரசம் ஏன்?
முதலமைச்சராக இருந்தபோது ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜக தலைமையிடம் சரணாகதி அடைந்தார். இந்த முறை கட்சியைக் காப்பாற்றுவதற்காக சரண் அடைந்துள்ளார். இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் நடப்பதால் அதை எதிர்கொள்ள முடியாமல் பாஜகவிடம் சமரசம் செய்துகொள்ள நினைக்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் வழியாக சின்னத்தைப் பறித்துக் கொள்வார்கள் என எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். செங்கோட்டையனை கொண்டு வந்து போட்டியாக நிறுத்தி, தலைமை பதவியை பறித்து விடுவோம் என பாஜக தலைமை அச்சுறுத்தி எடப்பாடி பழனிசாமியை பணிய வைத்துள்ளது.
எடப்பாடி தப்பிப் பிழைப்பதற்கு ஒற்றை வாய்ப்பு, பாஜகவிடம் சரண் அடைவதுதான் என்ற ஒற்றைப் புள்ளியை நோக்கி நகர்ந்துள்ளார். இது விருப்பப்பட்டு எடுத்த முடிவு என்று சொல்ல முடியாது. பாஜக இல்லாத வலுவான கூட்டணியை அமைப்பதுதான் எடப்பாடியின் திட்டம்.
விஜய் தான் முக்கிய காரணம்
இந்த முறை எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்ததற்கு விஜய் ஒரு முக்கிய காரணம். தவெக உடன் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 50 - 50 என தலா இரண்டரை வருடம் ஆட்சி என்ற தவெகவின் அதிகாரப் பகிர்வு திட்டம் எடப்பாடிக்கு ஏற்புடையதாக இல்லை. அதுவும் மொத்த சீட்களில் பாதி சீட்களை புதிய கட்சி கேட்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பது எடப்பாடி பழனிசாமியின் எண்ணம். இவ்வாறு தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ்.












Click it and Unblock the Notifications