அதிமுகவில் மீண்டும் சேர நேரில் சந்தித்து.. மன்னிப்பு கடிதம் தர வேண்டும்! எடப்பாடி பழனிசாமி பரபர
சென்னை: அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டோரை மீண்டும் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிமுக கடந்தாண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. அப்போது இரு தரப்பும் தாங்கள் தான் ரியல் அதிமுக என்றே தொடர்ந்து கூறிக் கொண்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட இரு தரப்பும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தது. இருப்பினும், அதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக் கொண்டது எல்லாம் தனிக்கதை.

எடப்பாடி பழனிசாமி: அதன் பிறகு நடந்த பல சம்பவங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வரக் காரணமாக இருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றார்.
முன்பு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனப் பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார். அவர்களில் சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நபர் கூட கொஞ்சக் காலத்திலேயே எடப்பாடி அணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கடிதம்: இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோரை மீண்டும் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தவறை உணர்ந்து மீண்டும் அதிமுகவில் சேர மன்னிப்பு கடிதம் தர வேண்டும் என்றும் கட்சி பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய அறிவிப்பு: இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவு வெளியிடப்படுபவர்களும்; கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications