ஏமாந்த சென்னை தொழிலதிபர்.. ஒரே அழைப்பில் மொத்தமும் போச்சு.. ஆக்ஷனில் குதித்த போலீஸ்
சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரின் செல்போனுக்கு அழைத்து மும்பை போலீஸ் என்று கூறி மிரட்டி ரூ.1 கோடியே 18 லட்சம் பறித்த வழக்கில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பலை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் ஆன்லைன் திருட்டு, ஆப்லைன் திருட்டு, இரட்டிப்பு லாபம், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்று கூறி பணம் பறிக்கும் சம்பவங்களில் மோசடி கும்பல் ஈடுபட்டு வருகின்றனர். முன்பின் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கடவுச் சொல், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை கூறக் கூடாது.

செல்போன்களில் வரும் லிங்குகளை கிளிக் செய்யக் கூடாது. ஆன்லைன் ஆப்புகளில் பணம் முதலீடு செய்யக் கூடாது என்று சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், படித்தவர்கள் கூட தெரிந்தே பணத்தை இழக்கும் சம்பங்களும், அதுதொடர்பான புகார்களும் குவிந்து கொண்டே வருகின்றன.
அந்த வகையில், சென்னை தொழிலதிபரிடம் மும்பை போலீஸார் என்று கூறி மிரட்டி 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர். இவருக்கு சமீபத்தில் செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது எதிரில் பேசிய நபர் பெடெக்ஸ் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய பெயரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளன.
இதுகுறித்து மும்பை போலீஸார் உங்களிடம் பேசுவார்கள் என கூறி இணைப்பை வேறு எண்ணுக்கு ஃபார்வேர்டு செய்துள்ளனர். அந்த இணைப்பில் பேசிய நபர் நீங்கள் போதைப் பொருள்களைக் கடத்தி கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். நீங்கள் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டுமானால் நாங்கள் சொல்லும வங்கிக் கணக்குக்கு உங்களது கணக்கில் உள்ள பணத்தை அனுப்பி வையுங்கள்.
அந்தப் பணம் உங்களுடையதுதான் என்பதை உறுதி செய்த பிறகு, உங்கள் பணத்தை உங்களது வங்கிக் கணக்குக்கே அனுப்பி வைத்து விடுகிறோம். அவ்வாறு நீங்கள் செய்யவில்லை என்றால் உங்களைக் கைது செய்வோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். அவர்களது மிரட்டலால் பயந்துபோன தொழிலதிபரும் மும்பை போலீஸ் என்று கூறிய நபரின் வங்கி கணக்குக்கு ரூ. 1 கோடியே 18 லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.
பணம் அனுப்பி வைத்த பிறகு அவர்களை தொழிலதிபரால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்து அதிர்ச்சி அடைந்த சென்னை தொழிலதிபர் இச்சம்பவம் குறித்து மாநில சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ்பாய் பதயாய் போக்ரா, முகவராக செயல்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவேக் பெலாடியா தமாஜ்பாய், பரேஷ் நரஷிபாய் கல்சாரியா, சாஹில், ஷாருக்கா குஜராத்தைச் சேர்ந்த விபுல் பாகுபாய் கோவதியா ஆகிய 6 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், மோசடிக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட கும்பல் வெளிநாட்டில் இருந்து கொண்டே இங்கு மோசடியில் ஈடுபட்டு வருவதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். அந்தக் கும்பலை பிடிப்பதற்கான நடவடிக்கையை சைபர் கிரைம் போலீஸார் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications