‘டூல்ஸ்’ பையுடன் பொன்முடி வீட்டுக்குள் நுழைந்த நபர்.. உள்ளே அழைத்துச்சென்ற ED அதிகாரிகள்! யார் இவர்?
சென்னை: அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீட்டில் பீரோக்களின் சாவியை நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், போலி சாவி தயாரிக்கும் நபரை வரவழைத்து, பீரோ, லாக்கர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திறந்து, சல்லடை போட்டு வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் சைதாப்பேட்டை, விழுப்புரம் வீடுகள், அவரது மகன் எம்.பி கவுதமசிகாமணி வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை குறித்த தகவல் அறிந்ததும் அந்தந்த பகுதிகளில் ஏராளமான திமுகவினர் குவிந்துள்ளனர்.

அமைச்சர் வீடுகளில் சல்லடை போடும் அதிகாரிகள்: அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு இன்று காலை 6.50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பொன்முடியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறையின் இந்த சோதனையின்போது உள்ளூர் போலீசாரை அழைத்து வரவில்லை. பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினரை உடன் அழைத்து வந்திருந்தனர்.
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் மொத்தம் 9-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி வீடு சைதாப்பேட்டையில் உள்ளது. அங்கும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் வீட்டிலும் ரெய்டு: மேலும், விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் திருபாணாழ்வார் தெருவில் அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் தளத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்த இன்று காலை 7.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால், அங்கிருந்த உதவியாளரிடம் வீட்டை திறக்குமாறு கூறினர்.
ஆனால் அமைச்சர் அனுமதி இல்லாமல் வீட்டை திறக்க முடியாது என கூறியதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். பின்னர் அமைச்சர் பொன்முடியின் உறவினர் அங்கு வந்து வீட்டை திறந்து விட்டார். அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வீட்டின் கீழ் தளத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீரோ சாவி இல்லை: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்த பீரோக்களின் சாவி இல்லாததால் அங்கிருந்த உதவியாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சாவியைக் கேட்டனர். அவர் தன்னிடம் சாவி இல்லை எனத் தெரிவித்த நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்னர் போலி சாவி தயாரிக்கும் நபரை வரவழைத்தனர்.
போலி சாவி தயாரிக்கும் நபர்: விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் இருந்து போலி சாவி தயாரிக்கும் நபர் வரவழைக்கப்பட்டார். தனது டூல்ஸ் பையுடன் வந்த அவரை மட்டும் பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அவரது போலி சாவி மூலம் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த 2 பீரோக்கள் மற்றும் லாக்கர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திறந்து சோதனை போட்டு வருகின்றனர்.
பின்னர், போலி சாவி தயாரிக்கும் தொழிலாளியான தனபால் பொன்முடி வீட்டில் இருந்து வெளியே வந்தார். அமைச்சர் பொன்முடி வீட்டில் 2 பீரோக்கள் போலி சாவி மூலம் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லாக்கரை மட்டும் திறக்க முடியவில்லை என்றும் போலி சாவி தயாரிக்கும் தனபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications