ஆடிப்போன அமித்ஷா.. "பாதகச்செயல், இது அயோக்கியத்தனம்".. தமிழக பாஜக கொந்தளிப்பு
சென்னை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோ வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சிக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசுவது போன்ற ஒரு போலி வீடியோவை 'இந்தியா' கூட்டணி கட்சியினர் உருவாக்கி வெளியிட்டு உள்ளனர். இதை காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும் பகிர்ந்துள்ளார். அப்படியெனில் இந்த போலி வீடியோ உருவாக்கம் காங்கிரஸ் மேலிடம் அதாவது ராகுல் காந்தி செய்த சதி என்பது உறுதியாகிறது.

ராகுல் காந்தியின் ஒப்புதல் இல்லாமல் ரேவந்த் ரெட்டி இதுபோன்ற பாதகச்செயலை, அயோக்கியத்தனத்தை செய்ய துணிந்திருக்க மாட்டார். பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தொடர வேண்டும். தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் உறுதியான நிலைப்பாடு. இதில் ஒரு நாளும் பாஜக மாறுபட்டதில்லை.
'இந்தியா' கூட்டணி கட்சியினர் பாஜகவுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். இது தகவல் தொழில்நுட்ப யுகம். உண்மை ஒரு நொடியில் அம்பலமாகிவிடும். எது உண்மை, எது போலியானது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
ஆங்கிலேயரின் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு 55 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் இனி ஒருபோதும் வெற்றி பெறாது. குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது போன்று போலி வீடியோ வெளியானது. இதை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் மற்றும் இந்தியா கூட்டணியினர் பலர் பரப்பினர்.. இந்த வீடியோ போலி என்ற அறிவித்த அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே இட ஒதுக்கீடு குறித்து தன்னைப் பற்றிய போலி வீடியோவை பரப்பி மக்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.
அசாமில் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை பாஜக பாதுகாக்கும் என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேன். காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றத்தால் தன்னைப் பற்றி போலி வீடியோவைப் பரப்பி வருகிறார்கள், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்துள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் பதவி ஏற்ற பிறகு அக்கட்சியின் அரசியல் தரம் தாழ்ந்துள்ளது" இவ்வாறு அமித் ஷா கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications