பிரபல யூடியூபர் இர்ஃபான் காருக்குள்ளேயே இருந்தாராமே.. கேஸூம் போடலயாம்.. அப்ப "அவர்" யார்.. 110 கிமீ
சென்னை: பிரபல யூடிபர் இர்பான் கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம், விபத்து குறித்து வியூகமான தகவலும் வட்டமடித்தவாறே உள்ளன.
மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான்.. இவர் சென்னையை சேர்ந்தவர்.. மிகச்சிறந்த திறமைசாலி.. இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் இவரது யூடியூப் வீடியோக்களுக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

ஹோட்டல்கள்:
தமிழில் உணவு பதிவுகளை வெளியிடுவதில் மிக முக்கியமானவர்.. கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை ஒன்றையும் விடமாட்டார்.. ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் உணவு பதிவுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெருகி வருகிறது.. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட தகவல்களை நிறைவுடன் தன்னுடைய வீடியோவில் தருபவர்.. சமீபத்தில்தான், இவருக்கு திருமணமானது. இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்..
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, இர்பானின் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பான் கார் சென்றபோது, எதிரே வந்த பெண்மணி மீது பலமாக மோதி, விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்..
பத்மாவதி:
உயிரிழந்த நபர் பெயர் பத்மாவதி.. 55 வயதாகிறது.. பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரில் வசித்து வந்திருக்கிறார்.. பொத்தேரியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகரில் ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றபோது, இர்பானின் சொகுசு கார் வேகமாக வந்து பத்மாவதி மீது மோதியிருக்கிறது.. இதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார் பத்மாவதி..
பொத்தேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தை ஏற்படுத்திய காரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணையையும் துவங்கினர்.. இதையடுத்து, கார் டிரைவர் அசாருதின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. இதனிடையே, விபத்து நடந்தபோது, காருக்குள் இர்பான் இருந்ததாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தது பகீரை கிளப்பியது..

அசாருதீன்:
அந்த பகுதி மக்களே இப்படி சொன்ன நிலையில், திடீரென "காரை ஓட்டியது தான் தான்" என்று டிரைவர் அசாருதீன், தானாகவே ஏன் போலீசில் சரணடைந்தார் என்றும் கேள்வி எழுந்தன. ஒருவேளை, கார் ஓட்டிவந்து விபத்துக்குள்ளாக்கிவிட்டு இர்பான் எஸ்கேப் ஆகிவிட்டாரா? இப்போதுதான் கல்யாணம் முடிந்ததால், மேலிடத்து செல்வாக்குடன் டிரைவரை பலிகடாவாக ஆக்கியிருக்கிறாரோ என்றெல்லாம் சர்ச்சைகள் வட்டமடித்தன..
இப்படி பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலம்வரும்நிலையில், அதுகுறித்த மேலும் சில தகவல்கள் கசிந்து வருகின்றன.. கடந்த 25ம் தேதி அதாவது வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது..
விசாரணை:
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், விபத்து நடந்தபோது இர்பான் மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேர் காரில் இருந்ததாக புதுதகவல் வெளியாகி உள்ளது.. விபத்து நடந்த அன்று இர்பான் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது மனைவியின் சொந்த ஊரான தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது...
விபத்து நடந்தபோது அவரது கார், 110கிமீ வேகத்தில் பறந்து வந்ததாம்... இர்பான் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், அவரது உறவினரான அசாரூதின் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பரபரப்பு:
இதனிடையே, இர்பானின் காரை பறிமுதல் செய்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், போலீசார் உரிய ஆவணங்களை வழங்காததால், பரிசோதனை செய்யாமலேயே, ஆர்டிஓ ஆபீசர்ஸ், அந்த காரை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.
இப்படி தினமும், உறுதிப்படுத்தப்படாத புது புது யூகங்கள் இணையத்தில் தொடர்ந்து வட்டமடித்து வரும்நிலையில், உண்மைத்தன்மையை போலீசார் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications