”கொடியிலே மல்லிகைப்பூ” மறக்க முடியுமா? ஏழைகளின் ஜேசுதாஸ்.. ஜெயச்சந்திரன் பற்றி வைரமுத்து உருக்கம்
சென்னை: 'கொடியிலே மல்லிகைப்பூ' மறக்க முடியுமா?... 'தெய்வம் தந்த பூவே' காற்றில் கரையுமா?.. 'என்மேல்விழுந்த மழைத்துளியே' மண்ணில் மறைந்துபோகுமா? என்று மறைந்த புகழ்மிக்க பாடகர் ஜெயச்சந்திரனுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயச்சந்திரனை ஏழைகளின் ஜேசுதாஸ் என்று அழைப்பேன் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர் பாடகர் ஜெயச்சந்திரன். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். 80 வயதான ஜெயச்சந்திரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவினால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கேரளாவில் பிறந்தவர் என்றாலும், தமிழிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் ஜெயச்சந்திரன். இவரது குரலுக்கு மயங்காத இதயங்கள் இல்லை என்று சொல்லலாம். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது.. என்ற பாடலை பாடி தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சை கவர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
இதேபோன்று அப்போது இளைய தளபதியாக இருந்த தவெக தலைவர் விஜய்க்கு ஹிட் கொடுத்த படமான பூவே உனக்காக படத்தில் சொல்லாமலே யார் பார்த்தது.. என்ற பல பாடலை ஜெயச்சந்திரன் தான் பாடினார். ஜெயச்சந்திரன் மறைவுக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்துவும் ஜெயச்சந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பாடகர் ஜெயச்சந்திரன்
காலமானார் என்ற செய்தியால்
கண்கள் நீர்கட்டின
'கொடியிலே மல்லிகைப்பூ'
மறக்க முடியுமா?
'தெய்வம் தந்த பூவே'
காற்றில் கரையுமா?
'என்மேல்விழுந்த
மழைத்துளியே'
மண்ணில் மறைந்துபோகுமா?
எத்துணை எத்துணை பாடல்கள்
அத்துணையும் முத்துக்கள்
பழக இனியவர்;
பண்பாளர்
அவரை நான்
ஏழைகளின் ஜேசுதாஸ்
என்பேன்

அவர்
உடல் மறைந்தாலும்
குரல் மறையாது
'இன்று எழுதிய என்கவியே
இனிமேல் உன்னை
எவர் இசைப்பார்'
கனத்த மனத்தோடு
அஞ்சலியும்
ஆழ்ந்த இரங்கலும்... என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications