சென்னை கடலில் இப்போதே ஆரம்பித்த கொந்தளிப்பு.. கோடை புயல் ரொம்ப மோசமானது.. எச்சரிக்கும் மீனவர்கள்
சென்னை: கோடை காலம், அதுவும், சித்திரை மாதம் வீசும் புயல் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று மீனவர்கள் தங்கள் பழைய அனுபவங்களை நினைவு கூர்கிறார்கள்.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக கூறியுள்ள, சென்னை வானிலை ஆய்வு மையம், இது புயலாக மாறி 30ம் தேதி தமிழக கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபனி என்பது உருது வார்த்தை. இதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. பிரமாண்டமானது, ஆபத்தானது என்பது போன்ற பல்வேறு அர்த்தங்கள் வருகின்றன.

மோசமாக இருக்கலாம்
ஃபனி என்ற பெயரை, வங்கதேசம் சூட்டியுள்ளது. பெயருக்கு ஏற்ப இந்த புயல் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் இதைத்தான் சொல்லியுள்ளார். ஆனால், இதையெல்லாம் தாண்டி அனுபவம் என்று ஒன்று இருக்கிறதல்லவா. அந்த அனுபவஸ்தர்கள் சொல்வதை கேட்டால் கொஞ்சம் திகில் வரத்தான் செய்கிறது.

சித்திரை புயல் அரிது
சென்னையை சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அவர்கள் கூறும் தகவல்படி, சித்திரை மாதத்தில் புயல் தமிழகத்தை தாக்குவது அரிதான நிகழ்வுதானாம். ஆனால், அப்படி தாக்கினால், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அந்த புயல் வலிமையானதாக இருக்கும் என்கிறார்கள்.

புயலின் வேகம்
1979ம் ஆண்டு மற்றும் 1984ம் ஆண்டுகளில் சித்திரை மாதம், சென்னை உட்பட தமிழகத்தை கடுமையாக புயல் தாக்கியதை அவர்கள் உதாரணமாக சுட்டிக் காட்டுகிறார்கள். அந்த காலகட்டங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டதாகவும், பிற காலகட்டங்களில் ஏற்படும் புயலை காட்டிலும், சித்திரை மாதத்தில் வீசும் புயலின் வேகம் அதிகம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

கடல் கொந்தளிப்பு
வானிலை ஆய்வு மையம் புயல் சின்னம் பற்றி அறிவிக்கும் முன்பே சென்னை கடலில் அதன் தாக்கத்தை மீனவர்கள் உணர்ந்துள்ளனர். கடல் இப்போதே கொந்தளிப்போடுதான் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அவர்கள், இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை எங்களால் பழைய காலகட்டத்தோடு ஒப்பிட்டு கணிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications