அப்பா, மகள் தீவிர திமுக..! மகன் தவெக.. சத்யராஜ் வீட்டிற்குள் அரசியல் களேபரம்!
சென்னை: நடிகர் சத்யராஜ் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை மிகத் தீவிரமாக ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் வேளையில் அவரது மகன் விஜய்யை வென்று வாருங்கள் தலைவா என்று வாழ்த்தியுள்ளார். பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக அப்பா வாக்கு கேட்கிறார். மகன் வேளச்சேரி தவெக வேட்பாளர் ஆதரவாக வாக்குக் கேட்கிறார். இதற்கு இடையில் மகளோ, திமுகவின் அதிகாரப்பூர்வமாக இணைந்து சீட்டு கேட்டு விருப்ப மனு அளித்திருந்தார். ஒரே வீட்டிற்குள் ஏன் இத்தனை குழப்பம்?
நடிகர் சத்யராஜ் வீட்டிற்குள் என்னதான் நடக்கிறது. இதை அவரவர் அரசியல் நிலைப்பாடு? சுதந்திரம் என்று எடுத்துக் கொள்வதா? இல்லை, 'கிடைத்தவரை லாபம்' என எல்லா இடங்களில் துண்டு போட்டு வைக்கிறார்களா? இந்த அரசியல் குழப்பத்தால் சமூக ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது சத்யராஜ் குடும்பம்.

தேர்தல் களத்தில் பல நடிகர்கள் பிரச்சாரம் செய்துவருகின்றன. இன்னும் சொல்லப் போனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று கட்சியில் வேட்பாளர்களாகத் தனித் தனியாகப் போட்டியிடும் விநோதம் கூட அரங்கேறியுள்ளது. லாட்டரி அதிபர் மாட்டின் மனைவி லீமா ரோஸ் அதிமுக வேட்பாளராக நிற்கிறார். மருமகன் ஆதவ் அர்ஜுனா, தவெக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் தனிக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறார்.
அதேபோல்தான் சத்யராஜ், திமுக வேட்பாளரைத் தீவிரமாக ஆதரித்து வாக்கு கேட்டு வருகிறார். தவெக விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த சத்யராஜ், "முதலில் முதல்வர் ஸ்டாலினைச் சார் என்று விஜய் அழைத்தார். அடுத்து அங்கிள் என்று அழைத்தார். எனக்கு பகீர் என்று ஆகிவிட்டது. நாம் பார்த்த விஜய் இது இல்லையே எனத் தோன்றியது. இதே ஒருவேளை ஜெயலலிதா உயிருடன் இருந்து, அவரை விஜய் ஆன்ட்டி ன அழைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் நினைத்துப் பாருங்கள்?
எம்ஜிஆரோடு யாரைப் போய் ஒப்பிடுவது? 'நாடோடி மன்னன்' படத்தைச் சொத்துகளை விற்று எடுத்தார். அதை வெளியிட முடியாமல் பிரச்சனை வந்த போது எம்ஜிஆர், 'சென்சார் கொடுக்காவிட்டால், உன்னிடம் கெஞ்ச மாட்டேன். படத்தை மவுண்ட் ரோட்டில் வைத்துக் கொளுத்துவேன்' என்றார். 'இந்தப் படம் ஓடினால் மன்னன்; ஓடாவிட்டால் நான் நாடோடி' என்று சொன்னார். அவருடன் ஒப்பிட்டு நான் தான் அடுத்த எம்ஜிஆர் என்று ஒருவர் சொல்கிறார்" என்று கிண்டலடித்துள்ளார் சத்யராஜ்.
ஒரே வீட்டில் அப்பா, மகள் ஒரு பக்கமும் மகன் இன்னொரு பக்கமும் அரசியல் ஈடுபட்டு வருவது பற்றிய சத்யராஜ் மகள் திவ்யா, தனக்கு இருவரை மிக அதிகமாகப் பிடிக்கும். ஒன்று, சத்யராஜ், மற்றொன்று சிபி அண்ணன். அவருக்கு புளு கலர் பிடிக்கும். எனக்கு பிங்க் கலர் பிடிக்கும். அண்ணனுக்கு புளு பிடிக்கும் என்பதால் எனக்கும் புளு பிடிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்று பட்டும் படாமல் பேசியுள்ளார்.
மேலும் தனக்கு விஜய்யைப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால், ஒரு அரசியல்வாதியாக விஜய்யைக் கேள்வி கேட்க எனக்கு எல்லா உரிமையையும் உள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இவரது சகோதரர் சிபி, அவரது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யை ஆதரித்து ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் வேளச்சேரி தவெக வேட்பாளரை ஆதரித்து காணொளியும் வெளியிட்டுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், "1993 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதிதான், பொள்ளாச்சியில் உள்ள 'சக்தி ஹோட்டல்' மாடியில் வைத்து நான் உங்களை (விஜய்) முதன்முதலில் சந்தித்தேன். அப்போது, அப்பா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக, S.A. சந்திரசேகர் ஐயா மற்றும் 'கேப்டன்' விஜயகாந்த் மாமா ஆகியோருடன் நீங்கள் வந்திருந்தீர்கள். அந்தச் சமயத்தில், மிகவும் எளிமையான தோற்றத்துடன் இருந்த இந்த இளைஞர், பிற்காலத்தில் கோடிக்கணக்கான இதயங்களை வென்று, ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று நான் சற்றும் அறிந்திருக்கவில்லை.
நீங்கள் இனிமேல் நடிப்பைத் தொடரப்போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் எப்போதும் உங்களுக்குத் துணையாக நிற்பேன். நான் காதலித்து, பின்னர் என் மனைவியாக மாறிய ரேவதியுடன் நான் 2000-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி ஆல்பர்ட் திரையரங்கில் 'பிரியமானவளே' படத்தைப் பார்த்தேன்.
கடந்த ஆண்டுகளில் உங்களுடன் நான் செலவிட்ட தனிப்பட்ட தருணங்களை, குறிப்பாக எங்கள் திருமணத்திற்குப் பிறகு இரவு உணவுக்காக உங்கள் வீட்டிற்கு நாங்கள் வந்தது, எனது 'லீ' (Lee) திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்துகொண்டது, என் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்தி நீங்கள் எனக்கு போனில் அழைத்து வாழ்த்தியது மற்றும் நான் எப்போது அழைத்தாலும், குறுஞ்செய்தி அனுப்பினாலும் நீங்கள் உடனுக்குடன் அளித்தது இவையெல்லாம் என் வாழ்வின் மிகவும் பொக்கிஷமான நினைவுகளாகும்" எனத் தெரிவித்துள்ள சிபி, இறுதியாக "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்!" என்ற பஞ்ச் வசனத்தை நினைவுகூர்ந்துள்ளார். கூடவே "வென்றுவா தலைவா; நாங்கள் இருக்கிறோம்" என்றும் ஆதரவு அளித்துள்ளார்.
ஆனால், இவரது அப்பா சத்யராஜ், தான் பங்கேற்கும் பிரச்சார கூட்டங்களில் விஜய்யைப்போல் பேசி கிண்டலடித்து வருகிறார். முன்னதாக கரூரில் தவெகவினர் 41 பேர் பலியான போதும் அந்த உயிரிழப்பைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தார்.
- கடற்கரய்












Click it and Unblock the Notifications