தந்தையர் தினம் 2020 : ஒவ்வொரு அப்பாக்களுக்கும் இதுபோல ஒரு கதை உண்டு!
எனது தந்தை பெயர் சின்னையன்.. நான் ரவிசங்கர்.
எளிய விவசாயக் குடும்பம். பாண்டவர்கள் போன்று ஐந்து மகன்கள், அதில் என் அப்பா தான் மூத்த மகன். அவர்கள் தந்தையை சிறு வயதில் இழக்கவே, அப்பா கல்வியை தொடர முடியாத சூழ்நிலையால் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேருகிறார். அவரிடம் இருந்த காசை கொண்டு கைத்தறி தொழிலை தொடங்க ஆசைப்பட்டார்.
திறப்பு விழாவுக்கு சிறிது நாள் முன்பு, மழை வெள்ளம் காரணமாக கட்டிடம் இடிந்து விட்டது. கடனைப் பெற்று அதை சரி செய்து சிறிது காலம் தொழில் செய்து, சரி வராததால் குடும்பமாக தனியார் தொழிற்சாலையில் உள்ள காலனியில் குடியேறினோம். இப்போது சாமிக்கு தனி அறை உண்டு. ஆனால் அப்போது ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு எல்லாம் ஒரே அறைதான். பலவருடம் வேலையில் இருந்தவர், வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்குவதாக சொன்னார். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவதா என்று நாங்கள் கேட்க.
தந்தையர் தினம் 2020 : தலை முறை கடந்து தணியும் தந்தையின் தாகங்கள்!
துணியாதவன் வெற்றி பெறுவதில்லை என்று அவர் சொல்ல. யார் வென்றார் என்பதை காலம் பதில் சொல்லியது. ஜவுளித்தொழிலில் அன்றைய சூழ்நிலையிலேயே பல லட்சம் நஷ்டம். இருந்த தோட்டத்தை விற்று, அதை சரி செய்தார். பிறகு சிறு தொழில்கள் அவருக்கு கைகொடுத்தது. விற்ற தோற்றத்துக்கு நிகரான சில தோட்டம் பின்னாளில் வாங்கப்பட்டது. விழுவதும் மீண்டு(ம்) எழுவதும் அவருக்கு புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு முறையும் தானாகவே எழுந்தார் என்பதுதான் சிறப்பு.
அனைவருக்கும் அம்பானியின் கதையே எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. ஒவ்வொரு அப்பாக்களுக்கும் இதுபோன்ற ஒரு கதை உண்டு.
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!