அடிக்கடி இங்க வர்றாரே.. மோடி முகத்தில் பயம் தெரியுது.. அடித்து ஆடும் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி என்றும், தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகை தந்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அண்மையில் தான், திருச்சிக்கும், ராமேஸ்வரத்துக்கும், சென்னைக்கும் வந்து சென்ற பிரதமர் மோடி மீண்டும் திருப்பூர், மதுரை, நெல்லைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வரும் மார்ச் 4ஆம் தேதி மீண்டும் சென்னைக்கு வருகை தர உள்ளார் பிரதமர் மோடி. லோக்சபா தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே பிரதமர் மோடியின் கவனம் தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டுக்கு 2 நாள் பயணமாக வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து, நேற்று திருநெல்வேலியில் நடந்த அரசு விழாவில் திமுகவையும், தமிழ்நாடு அரசையும் விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுவதாக கூறினார். அதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்துள்ளார். அதில், "தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.கவைப் பற்றியும், திமுக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர்.
அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு தி.மு.கவை குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.
தி.மு.கவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.கவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கருணாநிதி அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு.
கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் 'இந்தியா' கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications