கூட்டாட்சிக்கு ஆபத்து.. அரசியலமைப்பு சாசனத்தை கைவிட மாட்டேன்! சென்னையில் சுதர்சன் ரெட்டி உறுதி
சென்னை: கூட்டாட்சி தத்துவத்தை காப்பதில் முதல்வர் ஸ்டாலின் முன்னோடியாக விளங்குவதாக "இந்தியா" கூட்டணி துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கூறினார். சென்னை வந்த சுதர்சன் ரெட்டி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். தொடர்ந்து பேசிய அவர், கூட்டாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சாசனத்தை கைவிட மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து திடீரென ஜெகதீப் தன்கர் விலகிய நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்தவரும், முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

சுதர்சன் ரெட்டி பேச்சு
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் இருவரும் ஆதரவு கோரி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று "இந்தியா" கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை தியாகராயநகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் திமுக கூட்டணி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
அப்போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சுதர்சன் ரெட்டிக்கு திருவள்ளூர் சிலையை பரிசாக அளித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சுதர்சன் ரெட்டி, கூட்டாட்சி தத்துவத்தை காப்பதில் முதல்வர் ஸ்டாலின் முன்னோடியாக விளங்குவதாகவும், தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளதாகவும், தமிழ் மண்ணை வணங்குவதாகவும் தெரிவித்தார். சுதர்சன் ரெட்டி கூறியதாவது:-
தமிழ்நாடு தான் வழிகாட்டி
தமிழ் மண்ணை வணங்குகிறேன். திராவிட தலைவர்கள், தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை வணங்குகிறேன். தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தை கொண்டது தமிழ்நாடு. கல்வி மற்றும் சுகாதாரத்தில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ள மாநிலமாக விளங்குகிறது. தொலைநோக்கு பார்வையில் இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் வழிகாட்டியாக உள்ளது. இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
மனித ஆற்றல் வளர்ச்சியில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. சமூக பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும் முன்னோடி மாநிலமாக உள்ளது. துணை ஜனாதிபதி ஆனால் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். இந்தியாவின் அரசியல் அமைப்பு அடிப்படையே இன்று ஆபத்தில் உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு நன்றி
கூட்டாட்சி தத்துவத்துக்கு பேராபத்து வரும் போதெல்லாம் போராடுகிறார் ஸ்டாலின். இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு.. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது. குறிப்பிட்ட சில சக்திகளால் இந்தியாவின் கூட்டாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சாசனத்தை கைவிட மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.
நான் அரசியல் கட்சியை சார்ந்தவன் அல்ல.. ஆனால் அரசியலுன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என கூற முடியாது. தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications