மதுரவாயலில் ஆக்கிரமிப்பு கோவிலை இடித்த அதிகாரிகள்! சிலையை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண் பக்தர்கள்
சென்னை: மதுரவாயல் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த நாகாத்தம்மன் கோயிலை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் இடித்த போது அங்கிருந்த பெண் பக்தர்கள் சிலர் சாமி சிலையைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடுத்துள்ள மதுரவாயல் பகுதியில் சாலை ஓரம் நாகாத்தம்மன் கோயில் ஒன்று இருந்தது.. இந்தக் கோயில் தனது வீட்டின் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகச் சாந்தி முனிரத்தினம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2019 ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோயில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருப்பதை உறுதி செய்யப்பட்டதால், கோயிலை இடித்து நிலத்தை மீட்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஆக்கிரமிப்பு கோயில்: அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த.. கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனர். இது குறித்த தகவல் தெரிந்த உடன் அங்கே குவிந்த பெண் பக்தர்கள் கோயிலை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் சமயம் என்பதால் தேவையற்ற சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய அதிகாரிகள் அப்போது கோயிலை இடிக்காமல் திரும்பச் சென்றனர்.
மேலும், அப்போது அந்த பக்தர்களில் சிலர், கோயிலை இடிக்க வழக்குப் போட்ட சாந்தி என்பவரது வீடும் கூட 4 அடி வரை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருப்பதாகவும் அதை ஏன் அதிகாரிகள் இடிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
போலீஸ் பாதுகாப்புடன்: இந்தச் சூழலில் அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கவும் கோயிலை இடிக்கவும் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் அங்குச் சென்றனர். ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயிலை அதிகாரிகள் அகற்றினர். மேலும், ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த சாந்தின் என்பவரது வீட்டின் முன் பகுதியையும் அதிகாரிகள் இடித்தனர்.
கதறி அழுத பக்தர்கள்: கோயிலை இடிக்கும் போது அப்பகுதியில் கூடிய பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில பக்தர்கள் சாமி ஆடவும் செய்தனர். மேலும் சிலர் சாமி சிலையைக் கட்டிப்பிடித்து அழுததும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பெண் ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் அவருக்குத் தண்ணீர் கொடுத்து நிழலான பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கோயிலையும் ஆக்கிரமிப்பு நிலத்தையும் இடித்து அகற்றினர். கோயிலை இடித்த போது அங்கிருந்த பெண் பக்தர்கள் கதறி அழுததால் அங்கே கொஞ்ச நேரம் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications