மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம்... உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சென்னை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறி நுழைந்தது பற்றி சரியாக விசாரிக்கவில்லை என்று மதுரையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு, அதற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர அங்குள்ள ஒரு அறையில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறை சீல் வைக்கப்படவில்லை.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அந்த அறைக்கு அனுமதியின்றி உதவி கலால் ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் பெண் தாசில்தார் சம்பூரணம், ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேர் சென்று திரும்பி உள்ளதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பூரணம், சீனிவாசன், ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், மதுரை மக்களவை தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் உள்ள அறையில் பெண் அதிகாரி சம்பூரணம் அத்துமீறி நுழைந்த விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications