கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க! 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்ய வாய்ப்பு!
சென்னை: 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி முதல் மாணவ - மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, கடந்த 19 ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், சில பள்ளிகளின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 13 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications