பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?
சென்னை: பாஜகவுக்கு, சிறிய கட்சிகளுடன் சேர்த்து 35 சீட் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், பாஜக தலைமை 40 சீட்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை விரைவில் உறுதி செய்யப்படும் என என்.டி.ஏ கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு, அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ம.க 23 (மாம்பழம்), பாஜக 20 (தாமரை) தொகுதிகளில் போட்டியிட்டன. மற்ற கட்சிகள் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன. த.மா.கா (6), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1), அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (1), பசும்பொன் தேசிய கழகம் (1), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன. மொத்தமாக 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டனர்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில், பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்து பேசினார். இன்று (மார்ச் 20) டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறினார்.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
என்.டி.ஏ கூட்டணியில் ஜி.கே. வாசன், ஏசி சண்முகம், பச்சமுத்து, ஜான் பாண்டியன் என சீட் பிரித்துகொடுக்கப்படவுள்ள பிற கட்சிகளோடு சேர்த்து பாஜகவுக்கு மொத்தம் 35 சீட், பாமகவுக்கு 18 சீட், அமமுகவுக்கு 9 சீட் என 62 தொகுதிகள் கூட்டணிகளுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள 172 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம்.
ஆனால் அமித்ஷா எங்களுக்கு 40 தொகுதிகள் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கூடுதலாக 5 சீட் சேர்த்து 67 தொகுதிகள் போனால் 167 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடும் வகையில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை விரைவில் உறுதி செய்யப்படும் என என்.டி.ஏ கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications