இறுதி செமஸ்டர் & இறுதி செமஸ்டர் அரியர் தேர்வுகள்.. செப். 22ல் தொடங்கும்.. அண்ணா பல்கலை. அறிவிப்பு!
சென்னை: பொறியியல் படிப்புகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இறுதி செமஸ்டருக்கான அரியர் தேர்வுகள் வரும் செப். 22ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் கொண்டு வரப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா காரணமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த வேண்டியது இல்லை. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் இவர்களை பாஸ் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை யுஜிசி கடுமையாக எதிர்த்தது.
அதோடு கண்டிப்பாக இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என்று பல்கலைக்கழக கல்வி மானியக் குழுவான யுஜிசி அறிவித்தது. இதனால் தமிழகத்தில் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள், அரியர் தேர்வுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
மாணவர்களே.. தைரியமாக இருங்கள்.. திமுக ஆட்சியில் நீட்டை ரத்து செய்வோம்.. மு.க ஸ்டாலின் டிவிட்!
இந்த நிலையில்தான் பொறியியல் படிப்புகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இறுதி செமஸ்டருக்கான அரியர் தேர்வுகள் வரும் செப். 22ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதுவரை தேர்வு எழுத விண்ணப்பிக்கவில்லை என்றால் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
செய்முறைத் தேர்வுகள் 22-ம் தேதி நடக்கும். எழுத்துத் தேர்வுகள் 24 முதல் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.