அட்டைப் பெட்டிக்குள் ஆண் சடலம்.. கொடுத்த கடனை கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்! திகுதிகு திண்டுக்கல்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நிதி நிறுவன அதிபரை கொடூரமாக கொலை செய்து உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொலை வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலத்தை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலை ராமையன்பட்டி அருகே உள்ள பாலத்தின் கீழ் நேற்று காலை துர்நாற்றம் வீசியது.மேலும் ஒரு அட்டைப்பெட்டியில் ரத்தக்கறை படிந்த தடயமும் தெரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பாலத்தின் அருகே கிடந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி பிரித்துப் பார்த்தனர். அதற்குள் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் கை,கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அட்டை பெட்டிக்குள் இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் வ.உ.சி காலனியைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 58) என்பதும் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில்,தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணி, அங்கமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் குபேந்திரன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட N.S.நகர், முனியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன்(54), கோபால்பட்டி, V. குரும்பபட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி சாந்தி(59), திருப்பூர், அவிநாசி மடத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் மனைவி பிரியா(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணை மேற்கொண்டதில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இவர்கள் மூவரும் குபேந்திரனை தள்ளி விட்டதாகவும் அதில் குபேந்திரன் கீழே விழுந்து இறந்து விட்டதால் அவரை அட்டைப்பெட்டியில் வைத்து ராமையன்பட்டி, தரைப்பாலம் அருகே வீசி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கொலைக்கு பயன்படுத்திய டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த 18ஆம் தேதி கொலை நடந்த நிலையில் மூன்றே நாட்களில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், திண்டுக்கல்லில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications