கூடுதல் நிதி கொடுத்ததா மத்திய அரசு? நிர்மலா சீதாராமன் கணக்கில் விழுந்த ஓட்டை! விளாசும் நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக நிதி கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்திருக்கிறார். இதில், அவர் கூறிய தொகையில் தவறு இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதி காலகட்டம் தமிழ்நாட்டிற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6000-ஐ தமிழக அரசு வழங்கியது. இந்த தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றொரு சவாலை தென் தமிழ்நாடு எதிர்கொண்டது.

Finance Minister Nirmala Sitharaman miscalculated for the funds allocated to Tamil Nadu

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளம் புகுந்தது. உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என பேரிடரை இந்த இரண்டு மாவட்டங்களோடு சேர்ந்து தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளும் சந்தித்தன. இவர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் கொடுக்கப்பட்டது.

இந்த இரண்டு பேரழிவுகளையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், இதனை எதிர்கொள்ள தற்காலிகமாக ரூ.7,033 கோடியும், நிரந்தரமாக ரூ.12,659 கோடியும், உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். அடுத்த சில நாட்களில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பாதிப்புகளை 'தேசிய பேரிடராக' அறிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில்தான் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தவணையை மத்திய அரசு விடுவித்திருந்தது. அதாவது மொத்தமாக ரூ.72,961.21 கோடியை விடுவித்திருந்தது. இதில் அதிகபட்சமாக பாஜக ஆளும், பிரதமர் மோடியின் சொந்த தொகுதி அமைந்துள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடியை மத்திய அரசு பிரித்து கொடுத்திருந்தது. தமிழ்நாட்டிற்கு ரூ.2,976.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே புயல், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்து கூடுதல் நிதியை வழங்காமல் இருந்தது, இதன் தொடர்ச்சியாக வரிப்பகிர்வில் ஏமாற்றம் போன்றவை மத்திய அரசு மீது கூர்மையான குற்றச்சாட்டுகளை எழுப்பியது. இந்நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

அதாவது, "2014 மோடி ஆட்சி வந்ததிலிருந்து 2023 வரைக்கும், மொத்தமாக தமிழ்நாட்டுக்கு ரூ.2,88,627 கோடி நிதியை கொடுத்திருக்கிறோம். மற்றொரு தொகையாக ரூ.2,58,338 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர கொரோனா தொற்றுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலங்களும் வேகமாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதிக்கு வட்டி கிடையாது. 50 ஆண்டுகளுக்கு பிறகு இதனை திருப்பி கொடுத்தால் போதுமானது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,412 கோடி கொடுக்கப்பட்டது. ஆக இது எல்லாம் மொத்தம் சேர்த்து ரூ.6,96,666 கோடி இதுவரை தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

ஆனால் இதில்தான் கணக்கு இடிக்கிறது. அதாவது 2,88,627 + 2,58,338 + 6,412 ஆகியவற்றை கூட்டினால் ரூ.5,53,377 கோடிதான் வருகிறது. ஆனால் நிர்மலா சீதாராமன் ரூ.6,69,666 கோடி வந்திருப்பதாக கூறியிருந்தார். எனவே அவர் ரூ.2,16,289 கோடியை மிஸ் செய்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+