இதுதான் தங்கமான அறிவிப்பு.. ஏடிஎம் போறீங்களா? இனி எல்லாம் ஈஸி.. நிதி அமைச்சர் தங்கம் போட்ட ஆர்டர்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் வங்கிக் கிளைகளின் பலகைகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியில் ஆட்சி அமைத்தது முதலாகவே ஹிந்தி மொழியை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை பாஜக அரசு செய்து வருகிறது. சமீபகாலமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையிலும் கூட இந்தியை பிரதானமாக கொண்டு வருவதற்கான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கு தமிழகம், கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஹிந்தி மொழி அல்லாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் கூட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கல்வி நிலையங்களில் இந்தி மொழியை முதன்மையாக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்திருந்தது.
ஏன் நாடளுமன்றத்தில் கூட இப்போதெல்லாம் தமிழ்நாடு எம்பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் பதில் அளித்து வருவது வழக்கமாகி உள்ளது. நாடளுமன்ற அவை விதிப்படி ஒரு மொழியில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு வேறு மொழியில் பதில் அளிக்க கூடாது என்ற கட்டுப்பாடு இல்லை.
ஆனால் மத்திய அமைச்சர்கள் பொதுவாக துறை சார்ந்த தென்னிந்திய எம்பிக்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அளித்து வந்தனர். கேள்வி கேட்கும் எம்பிக்கு இந்தி தெரியாத பட்சத்தில் அமைச்சர்கள் மரியாதை கருதி ஆங்கிலத்தில் பதில் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இதுவும் இப்போதெல்லாம் மாறி வருகிறது.
சேவைகள்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் வழங்கப்படும் சேவைகள் தமிழ் மொழியில் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக எளிய மக்கள் பயன்படுத்தும் சேவைகள் அனைத்தும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் வங்கிக் கிளைகளின் பலகைகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாநில வங்கிகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் மாநிலத்தில் 417 புதிய வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கே ஏடிஎம்கள் கூட அமைக்கப்பட்டு உள்ளன. எனவே எங்கள் மாநில மக்களுக்கு எளிதாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஏடிஎம்களிலும், வங்கிக் கிளைகளின் முன் மேசைகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதை வங்கிகள் உறுதிசெய்ய வேண்டும்.
இதனால் ஏழை எளிய மக்கள் எளிதாக ஏடிஎம்களை பயன்படுத்த முடியும் என்று மாநில வங்கிகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில்தான் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications