விஜயகாந்த்தை கொன்றவர்களை கண்டுபிடிங்க உதய் அண்ணா.. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அதிர்ச்சி பதிவு!
சென்னை: விஜயகாந்த் மறைவு குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விஜயகாந்த்தை கொன்றவர்களை கண்டறிய வேண்டும் என அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவர், நடிகர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மருத்துவமனையில் காலமானார். விஜயகாந்த்தின் மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்திலும், கட்சி அலுவலகத்திலும் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

மறைந்த விஜயகாந்த் உடல் அவரது இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, விஜயகாந்தை கடைசியாக பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர்.
கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாசலில் திரண்ட கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்ணீர் மல்க விஜயகாந்தின் உடலை காணக் கூடியுள்ளனர். விஜயகாந்தின் உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த்தை கொன்றவர்களை கண்டறிய வேண்டும் என பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். நேரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் படம் மூலம் பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றார். தொடர்ந்து இவர் இயக்கத்தில் கோல்டு திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இந்நிலையில், விஜயகாந்த் மறைவு தொடர்பாக அதிர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து வெளியிட்டுள்ள பதிவில், "நான் உங்களை கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயின்ட் மூவீஸ் அலுவலகத்தில் சந்தித்தபோது, உங்களை அரசியலுக்கு வரும்படி கூறினேன். மேலும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டறியும்படி கூறினேன். இப்போது விஜயகாந்த்தை கொன்றவர்களையும் நீங்கள் கண்டறிய வேண்டும்.

ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் கமல்ஹாசனையும் அவர்கள் கொலை செய்ய முயன்றுள்ளார்கள். இதை அப்படியே விட்டுவிட்டால், அடுத்தது நீங்களும், ஸ்டாலின் சாரும் தான் டார்கெட்டாக இருப்பீர்கள். கொலையாளிகளையும் அவர்களின் நோக்கத்தையும் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிமையான விஷயமே" எனத் தெரிவித்துள்ளார். அல்போன்ஸ் புத்திரனின் இந்த பதிவு அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதை நேற்று தான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் குறைந்தபட்சம் ஓடிடியில் வெளிவரும் வகையில் குறும்படங்கள், பாடல்கள், வீடியோக்களை தொடர்ந்து இயக்குவேன்.

நான் சினிமாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாகவோ அல்லது கணிக்க முடியாததாகவோ இருக்கும்போது, வாழ்க்கை 'இன்டர்வல் பஞ்ச்' போல திருப்பத்தைக் கொடுத்துவிடுகிறது" எனப் பதிவிட்டிருந்தார். அல்போன்ஸ் புத்திரனின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications