தனியார் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்
சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை
கேளம்பாக்கத்தில் உள்ளது செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அமைந்துள்ள பிரதான கட்டிடத்தின் முதல் தளத்தில் மருந்தகம் அமைந்துள்ளது.

இந்த மருந்தகத்தில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து பிரதான கட்டிடத்தில் இருந்த நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் அவசரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றினர்.தீ மளமளவென 2 மற்றும் 3வது தளங்களுக்கும் பரவியது.
இதனையடுத்து மேல்தளத்திலிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளும் பாதுகாப்பாக ளெியேற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்தனர்.
சிறுசேரி மற்றும் மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மருத்துவமனை வளாகத்தில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பபட்டது.
எனினும் இந்த தீ விபத்தில் மருந்தகத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கருகி நாசமாகின. தீ விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் ஏசி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட பழுது மற்றும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை உறுதி செய்தனர் .












Click it and Unblock the Notifications