ஆளுநர் மாளிகை அருகே திடீர் தீ.. ஜனாதிபதி திரௌபதி முர்மு தங்கியிருக்கும்போது தீ விபத்தால் பரபரப்பு!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை எதிரே உள்ள இடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தங்கியிருக்கும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு, சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று 108 பட்டதாரிகளுக்கு பட்டங்களுடன், தங்கப் பதக்கங்களை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதிக்கு இன்று காலையில் முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் அளித்து சிறப்புரை ஆற்றினார் திரௌபதி முர்மு. இதைத்தொடர்ந்து, மீண்டும் ராஜ் பவனுக்குச் சென்று தங்கியுள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று அவர்களுடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து, அங்கேயே ஓய்வெடுத்தார்.

இந்நிலையில் தான், ஆளுநர் மாளிகைக்கு எதிரே திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இன்று இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால் பெயர் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த விழாவில் ஜனாதிபதி பங்கேற்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று அந்த அரங்குக்கு பெயர் சூட்டி கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு இரவு விருந்து அளிக்கிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications