அம்பத்தூர் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து... தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்
சென்னை: அம்பத்தூர் அருகே தனியார் பெயிண்ட் குடோனில் பாய்லர் வெடித்து ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் அடுத்துள்ள விநாயகபுரம் லட்சுமி அம்மன் நகரியில் சங்கர் என்பவருக்குச் சொந்தமான ஸ்டாலின் ஸ்பெஷாலிட்டி பெயிண்ட்ஸ் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான ரசாயன கெமிக்கல் குடோன் உள்ளது.
இன்று பிற்பகல் இந்த கெமிக்கல் குடோனில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக உயரழுத்த பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியுள்ளது.
திடீரென குடோனில் பற்றி எரிந்து தீயைக் கண்டு அக்கம்பக்கத்தின் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர், மாதவரம் , திருவிகநகர், செங்குன்றம், செம்பியம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புக் குழுவினர் 3 தண்ணீர் டேங்கர் லாரிகளை உபயோகித்து தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பேரல்களில் சேமித்து வைத்த பெயிண்ட் கெமிக்கல் என்பதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முயலும்போது, அவை மீண்டும் மீண்டும் வெடித்துச் சிதறி வருகிறது.இதனால் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது.
இந்தத் தீவிபத்திற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.