வங்கக் கடலில் மீன்பிடிக்க தடை.. இன்னும் 2 மாசத்துக்கு வேற வழியே இல்லை.. இதோ கோட்டைக்கு போன கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் 2 மாத மீன்பிடித்தடைக்காலம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை மீனவ சங்கங்கள் விடுத்திருக்கின்றன.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்தது.

மீன்வளம்: மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கில், ஏப்ரல், மே ஜுன் மாத காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.. ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
படகுகள் சீரமைப்பு: இந்த 61 நாட்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர். மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தவுடன் தமிழகத்தில் மீன்களின் விலையும் உயரத் தொடங்கும். அதேநேரம், பாரம்பரிய மீன்பிடிப் படகுகளான பாய்மரப் படகு, நாட்டுப் படகு மற்றும் கட்டுமரங்கள் வழக்கம்போல கடலுக்குச் செல்லும்.
இதுவரை தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை தமிழகத்தில் 1.90 லட்சம் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்விலை: இதையடுத்து, மீன்விலை உயர நிறைய வாய்ப்புள்ளதாக மீன்வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம், வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடம்பா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. என்று விற்பனையாகி கொண்டிருக்கிறது. ஆனால், இனிமேல்தான் இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மீன்விலை அதிகரிக்க போகிறது.. மீன்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட போவதாக சொல்கிறார்கள்.
காசிமேடு மீன்சந்தையில், பெரிய அளவிலான ஏற்றுமதிக்கான மீன்களின் வரத்து குறைந்தாலும், குறைந்த ஆழத்தில் பிடிபடும் சிறிய வகை மீன்கள் தொடா்ந்து கிடைக்கும் என்றும், தடைக்காலம் தொடங்காத கேரளம், கா்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் மீன் விற்பனைக்காக கொண்டு வரப்படும் என்றும் மீனவா்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மோட்டார் படகுகள்: மீன்பிடி தடைகாலத்தில் அனைத்து வகை மோட்டாா் படகுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு மீனவா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் அரசு வழங்கி வந்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரம் ரூபாயை இந்த ஆண்டு 8 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.. எனவே, இந்த தொகையை மீனவ குடும்பங்களுக்கு பயன்படும் வகையில் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. அத்துடன், படகுகளை பழுது நீக்க வங்கிக்கடனாக 5 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications