விர்ன்னு துள்ளுது மீன்கள்.. அப்ப இன்னும் 2 மாசத்துக்கு வேற வழியே இல்லையா? கோட்டைக்கு போன கோரிக்கை
சென்னை: மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 2 மாத மீன்பிடித்தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலைகள் இன்று முதல் உயர வாய்ப்புள்ளது.. சிறிய ரக மீன்கள் கிடைக்கும் என்றாலும், மீன்கள் வரத்து குறைவால் விலையில் உயர்வு இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை மீனவ சங்கங்கள் விடுத்திருக்கின்றன.
வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாக நடைபெறும். இதுபோன்ற நேரங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகளை பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது படகுகள், வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளதால், கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்திருக்கிறது.
மீன்பிடி தடைக்காலம்
இந்த மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துவிட்டால், கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுவிடும். மீனவர்களுக்கும் வேலையின்றி தவிக்கும் நிலைமை ஏற்படும்.
படகுகள்: இந்த காலகட்டத்தில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகளை கடற்கரையில் நிறுத்திவிடுவார்கள்.. மேலும், மீன் பிடி தடை காலத்தை பயன்படுத்தி பழுதடைந்துள்ள விசைப்படகுகள் மற்றும் வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். எனினும், சின்ன சின்ன படகுகள் மூலம், கரையோரத்தில் மட்டுமே மீன் பிடித்தல் நடைபெறும்என்பதால், மீன்களின் விலையும் ஓவராக அதிகரித்துவிடும்.
நேற்றிரவு முதல் அமல்
அந்தவகையில், இந்த வருடத்துக்கான மீன்பிடித் தடைக்காலம் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.. கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி அதாவது ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு தடைக்காலத்தில் பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடை காரணமாக, திருவள்ளூரில் துவங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். மாநிலம் முழுதும், 20,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல், துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். அதேநேரம், சிறு கட்டுமரங்கள், பைபர் படகுகள் வாயிலாக மீன்பிடிக்க எந்த தடையும் இல்லை.
மீன்பிடி தடைக்காலம்
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் திருநாகேஸ்வரன் சொல்லும்போது, "மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு அதாவது 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடைக்காலத்தில் மீன்பிடி விசைப்படகுகள் கடலில் சென்று மீன் பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் 5 கடல் மைல் தூரத்திற்குள் சென்று மீன் பிடிக்கலாம்.
மீன்பிடி தடைக்காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் சுமார் 800 படகுகளுக்கு மேல் உள்ளன. இதனை சேர்ந்த சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு 61 நாட்களுக்கு நிவாரணமாக ரூ.8 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தடைக்கால அறிவிப்பை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் (1983-ம் ஆண்டு) கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இரு மடங்கு உயர்வு
இந்த தடைக்காலத்தில், மீனவர்கள் தங்களின் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை புதுப்பித்தல், மீன்பிடி உபகரணங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.. சிறிய கட்டுமர மீனவர்கள் மட்டும் கடலில் சிறிது துாரம் சென்று மீன் பிடித்து வருவர். தடையால் மீன்வரத்து குறையும் என்பதால், மீன், இறால், நண்டு போன்றவற்றின் விலை இரு மடங்கு உயர வாய்ப்புள்ளது.
அதேபோல, மீனவ சங்கத்தினர் சொல்லும்போது, "மீன்பிடி தடைக்கால நிவாரணமாக, மீனவர்களுக்கு, 8,000 ரூபாய் மட்டுமே அரசு வழங்குகிறது. இதை, 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடைக்கால நிவாரணத் தொகையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ 8,000 தடைக்கால நிவாரணமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications