சென்னை அருகே.. கடலில் நடந்த அதிசயம்.. அப்படியே "ஸ்டன்" ஆகி நின்ற மீனவர்கள்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னையையொட்டியுள்ள சதுரங்கப்பட்டினம் கடல் பகுதியில் கரைக்கு 100 மீட்டர் தொலைவில் 20 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலங்கள் உலவி வருவதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சமீப நாட்களாக சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயக்கமடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் கரையையொட்டியுள்ள கடல் பகுதியில் உலாவும் ராட்சத திமிங்கலங்கள்தான். இப்பகுதியில் ஃபைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். இருப்பினும் பெரும்பாலான மீனவர்கள் கட்டுமரங்களையும், சிறிய அளவு ஃபைர் படகுகளையும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரையையொட்டி 100 மீட்டர் தொலைவில் சாம்பல் திமிங்கலங்கள் உலவி வருகின்றன.

இந்த வகை திமிங்கலங்கள் வங்க கடலுக்கு புதியது. அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல் பகுதிகளில் குளிர் நீரில் வாழும் இயல்புடைய இந்த திமிங்கலங்கள் இந்தியாவை ஒட்டிய கடல் பகுதிக்கு வந்திருப்பது ஆச்சரியமான விஷயம் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த வகை திமிங்கலங்கள் சாதாரணமாக 20 அடி நீளம் வரை இருக்கும். இது நினைத்தால் பெரிய வகை ஃபைபர் படகையே கவிழ்த்துவிடும். எனவேதான் மீனவர்கள் கடலுக்கு போக தயங்கி வருகின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "இந்த வகை திமிங்கலங்கள் சிறியதாக இருக்கும் போது வலையில் சிக்கிவிடும். ஆனால் இதை யாரும் சாப்பிட மாட்டார்கள். எனவே நாங்கள் மீண்டும் கடலில் விட்டுவிடுவோம். இது இறால்களை விரும்பி சாப்பிடும். இறால்கள் ஆழம் குறைவான கடல் பகுதிகளில் அதிகம் இருக்கும். எனவே தற்போது இந்த திமிங்கலங்கள் கடற்கரையையொட்டியுள்ள பகுதிக்கு வந்திருக்கிறது.
இது மனிதர்களை சாப்பிடாது. எனவே உயிர் மீது எங்களுக்கு பயம் கிடையாது. ஆனால் படகுகளை சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதால் கடலுக்கு போக தயக்கமாக இருக்கிறது. பெருங்கடலில் இருக்க வேண்டிய இந்த வகை திமிங்கலங்கள், விரிகுடா கடலில் இருப்பது ஆச்சரியம்தான். இதற்கு காலநிலை மாற்றம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். வரைமுறையற்ற மீன் பிடித்தல் காரணமாக திமிங்கலங்களின் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே மீன்களை இவை அதிக தூரம் பயணிக்கின்றன.
இந்த பயணத்தில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. இவ்வாறு கரைக்கு நெருக்கமாக வரும்போது அவை கரையில் ஒதுங்கி விடவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு ஒதுங்கினால் நிச்சயம் அது இறந்துவிடும்" என்று கூறியுள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக இறால் போன்ற திமிங்கலத்தின் உணவு உயிரினங்கள் இடம் மாறுகின்றன. அதை பின்தொடர்ந்து இவ்வாறு அறிமுகமில்லாத கடலில் திமிங்கலங்கள் வருகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படி இருப்பினும் இது அரிய நிகழ்வுகளில் ஒன்றுதான்.












Click it and Unblock the Notifications