யூடியூப்பை விட்டு வெளியேறிய ஃபிட்னஸ் பிரபலம்? ஏன்? தருண் குமாருக்கு என்ன ஆச்சு?
சென்னை: பலரும் புதியதாக யூடியூப் சேனல் தொடங்கி பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டுள்ள நிலையில், ஒரு பிரபல யூடியூபர் தனது சேனலை மூடப் போவதாக அறிவித்துள்ளது அவரது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஃபிட்னஸ் பற்றிய வீடியோக்களை தேடுபவர்கள் கட்டாயம் தருண் குமாரை தெரிந்து வைத்திருப்பார்கள். பள்ளிப் பருவ காலத்தில் பலரும் மைதானத்தில் மட்டைப் பந்தை எடுத்துக் கொண்டு கொளுத்தும் வெயிலில் வேர்க்க விருவிருக்க விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதற்கு நேர்மாறாக யூடியூப் தளத்தில் உடம்பை இரும்பாக மாற்றுவது பற்றி பாடம் நடத்தியவர் இந்தத் தருண்.

கொரோனா பரவல் உலகையே முடக்கிப் போட்ட காலத்தில்தான் யூடியூப் பக்கம் தலைவைத்தார் இவர். சரியாகச் சொன்னால் 2020-ல் தான் இவரது எண்ட்ரி நடந்தது. பள்ளி மிட்டாய் போல யாருடா இந்தப் பையன் எனக் கேள்வி எழுப்பியவர்களை 'நான் அந்தப் பையன்' என வியக்க வைத்தது இவரது வில் பவர். ஆரம்பக் காலகட்டத்தில் ஃபிட்னஸ் பற்றி சிலர் போடும் வீடியோக்களில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து விமர்சனம் செய்துவந்த தருண், அந்தப் பாதையில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக ஃபிட்னஸ் பற்றியும் அதற்கு உண்டான முறையான உணவு முறைகளைப் பற்றியும் டிப்ஸ் கொடுக்க தொடங்கினார். அதன் வழியே ஆன்லைன் டிரெய்னராக மாறினார். தமிழ்நாட்டில் ஃபிட்னஸ் பற்றிய டாப் 5 யூடியூபர்களில் தருண் முக்கியமான ஒருவராக மாறினார். பல பிராண்டுகளின் இன்ஃபுளூயன்சராக மாறினார்.
இப்போது இந்தக் கதை எல்லாம் எதற்கு? அவரைப் பற்றி ஏன் இப்போது பேச வேண்டும்? விசயம் இருக்கிறது. யூடியூப் ஆரம்பித்து நாமும் நான்கு காசு பார்க்க மாட்டோமா? என ஏங்கிவரும் 2கே கிட்ஸ் மத்தியில், பல லட்சங்களில் யூடியூப் மூலம் சம்பாதித்து வரும் தருண், யூடியூபை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஏழரை லட்சம் பேர் இவரை பின் தொடர்கிறார்கள். இவர் போடும் ஒவ்வொரு வீடியோ கண்டெண்ட்டும் 3 லட்சம் வரை சாதாரணமாக வீயூவ்ஸ் போகிறது. அப்படி இருந்தும் தருண் ஏன் வெளியேறினார்?
அதைப் பற்றி தன் கடைசி வீடியோவில் விளக்கிய தருண், "உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால் பள்ளி காலங்களில் ஒல்லிக்குச்சான் உடம்புடன் இருக்கும் ஒரு பையனாக படிப்பில் கவனம் செலுத்தாமல் பெண்கள் பின்னால் சுற்றும் ஒரு ஆளாகவே இருந்தேன். ஒரு கட்டத்திற்குப் பின் நம் உடம்பை ஃபிட்னஸ் மாடல் மாதிரி மாற்றினால் என்ன என்று தோன்றியது. ஆறே மாதத்தில் உடலை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் வீட்டுப் பக்கத்திலிருந்த ஜிம்மில் 300ரூபாய் பணம் கட்டி சேர்ந்தேன். ஆனால் நான் நினைத்ததைப் போல் மாற முடியவில்லை. பலருக்கும் உடம்பை ஏற்றவேண்டும் ஆசை உள்ளது. முறையான டயட் பற்றிய அறிவுதான் இல்லை என தெரிந்து கொண்டேன். 2017இல்தான் இந்த அனுபவம் கிடைத்தது.

அந்தக் காலகட்டத்தில் ஆன்லைன் ஃபிட்னஸ் டிரெயினிங் என்ற கான்செப்ட்டே புதிது. அப்போது யூடியூபில் தமிழில் யாருமே இல்லை. அப்போதுதான் ஜிம் மாஸ்டர் டயட் பற்றி பெரிய விழிப்புணர்வு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு நிறைய ஆங்கிலத்தில் ஃபிட்னஸ் பற்றிய வீடியோக்கள், கட்டுரைகளைப் படித்தேன். அதை என் மாஸ்டரிடமும் நண்பர்களிடமும் சொன்ன போது, 'இவ்வளவு விவரமாக இருக்கின்றாய்? ஆனால், உன் உடம்பு ஏன் இப்படி நோஞ்சானாக இருக்கிறது?' எனக் கேட்டனர்.
அப்போதுதான் மிக தீவிரமாக என் உடம்பை ஏற்ற ஆரம்பித்தேன். அந்த அனுபவத்தை வைத்து எனது குண்டு நண்பரை டிரெயின் செய்தேன். நல்ல ரிசல்ட் வந்தது. அதேபோல் சிலரைப் பயிற்றுவித்தேன். நல்ல மாற்றம் கிடைத்தது. அப்போது ஒரே கல்லில் ஒரு லட்சம் பேரை எப்படி பயிற்சி அளிக்கலாம் என யோசித்ததன் விளைவுதான் இந்த யூடியூப் வாழ்க்கை. அப்போது கையில் காசு இல்லை. பைக் வாங்க வைத்திருந்த பணத்தை வைத்து எடிட்டிங் கம்ப்யூட்டர் வாங்கினேன். நண்பனிடம் 3 மணிநேரம் வாடகைக்கு கேமிரா வாங்கினோம். அப்படித்தான் சேனல் தொடங்கினேன். 6 மாதத்தில் 100கே பேரைச் சம்பாதித்தேன். பெரிய பெயர் கிடைத்தது. பிராண்டுகள் தேடிவந்தன. பிரபலங்களைச் சந்திக்கும் அளவுக்கு உயர்ந்தேன்.
அது சரி? இப்போது ஏன் யூடியூப்பை விட்டு வெளியேறுகிறாய் என்று சிலர் கேட்கலாம். என் நண்பர்கள் வெளியேறிவிட்டால், பிறகு பார்வையாளர்கள் போய்விடுவார்கள். திரும்ப வரும் போது உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள்' என்று சொன்னார்கள். அது உண்மைதான். யூடியூப் அல்கரிதமே அப்படித்தான் உள்ளது. வாரம் ஒரு வீடியோ போடவில்லை என்றால் நம் போய்ச் சேரமாட்டோம். எனக்கு அந்தப் பயம் உள்ளது.
ஒரு யூடியூபரின் தொழில் என்பது 5 முதல் 7 வருடங்கள் வரைதான் தாங்கும். பல வருடங்கள் இதையே நம்ப முடியாது. ஒன்று அவர்களே பில்ஃட் அவுட் ஆகிவிடுவார்கள். இல்லை என்றால் மக்கள் நிராகரித்துவிடுவார்கள். நான் என் இளம் வயதிலேயே யூடியூப், டிரெயினிங் எனப் பல சுமைகளை ஏற்றுக் கொண்டேன். அதனால் இப்போது பிடித்த வேலையே பிடிக்காமல் போய்விட்டது.
வெளிப்படையாகச் சொன்னால், என் வீடியோக்களின் தரம் எனக்கே பிடிக்கவில்லை. அதனால் புதியதாக ஏதாவது செய்ய வேண்டும். அதற்காகப் பல துறைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். ஆகவே இதை விட்டுவிட்டு, புதிய விசயத்தைச் செய்ய விரும்புகிறேன். மீண்டும் வரும்போது இதுவரை தமிழில் யாரும் முயற்சிக்காத ஒரு விசயத்தைச் செய்வேன். அது மட்டும் உறுதி" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications