Flash Back: காந்தியை படுகொலை செய்த கும்பல் காமராஜரை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற வரலாறு!
சென்னை: அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளில்தான் தென்னாட்டு காந்தியடிகளான பெருந்தலைவர் காமராஜர் மறைந்தார்.. அதுமட்டுமா அண்ணல் காந்தியடிகள் உயிரைக் குடித்த இந்துத்துவ வெறிக்கும்பல்தான் பெருந்தலைவர் காமராஜரையும் டெல்லியில் உயிரோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்ய முயன்றது என்பது மறக்கத்தான் கூடிய வரலாறா?
1966-ம் ஆண்டு... இந்தியாவில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சாமியார்கள் கோஷ்டி தீவிரமாக வலியுறுத்திய தருணம்... இதற்காக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஆதரவுடன் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்டது.

காமராஜர் கொந்தளிப்பு
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது.. அப்போது, பசுவதை தடை சட்டத்தை முன்வைத்து ஜனசங்கம்/ ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மத அரசியல் செய்வதை வன்மையாக கண்டித்து பேசிக் கொண்டிருந்தார் காமராஜர். அதில் உச்சமாக காமராஜர் சொன்னது, நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துட்டுப் போறாங்க என்பதுதான். இதனை காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பகிரங்கமாகவே பேசினார் காமராஜர்.

நாடாளுமன்றம் மீது முதல் தாக்குதல்
அவ்வளவுதான்..காமராஜர் சொன்னதை செயலில் காட்டுகிறோம் என்பதைப் போல வன்முறைக் கூத்தடித்தது பசுவதை தடை சட்டம் கோரிய கும்பல். அந்த நாளும் வந்தது. 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி டெல்லி வீதிகளில் பசுவதை தடை கோரிய கும்பல் வன்முறை வெறியாட்டம் போட்டது. டெல்லி இர்வின் மருத்துவமனையில் வன்முறையை துவங்கிய இந்தக் கும்பல் நாடாளுமன்றத்தைத் தாக்கும் நோக்கத்துடன் மெல்ல மெல்ல நகர்ந்து போனது. அப்போது நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துங்கள் என அறைகூவல் விடுத்த எம்.பி.க்களையும் பார்த்து நாடு அதிர்ச்சியில் உறைந்தது. இதுதான் இந்தியாவில் நாடாளுமன்றம் மீதான முதல் தாக்குதல் என்பது சரித்திரம்

வெறியாட்டம் போட்ட சாதுக்கள்
டெல்லி வீதிகளில் ஈட்டிகள், திரிசூலங்கள் சகிதமாக நிர்வாண சாதுக்கள் தலைமையில்தான் இந்த வன்முறை பேயாட்டம் நடந்தேறியது. கண்ணில்பட்ட இடங்களை எல்லாம் தீயிட்டு எரித்தது இந்த கும்பல். வானொலி நிலையம், பிடிஅய் அலுவலகம் என எதுவும் தப்பவில்லை. இப்போது அந்த கும்பல் பார்வை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், டெல்லியில் காமராஜர் இல்லம் ஆகியவற்றை இலக்கு வைத்தது. இந்த இரு இடங்களிலும் திட்டமிட்டே ஏற்கனவே குண்டர் கும்பலை நிறுத்தி வைத்திருந்தது பசுவதை தடை கோரிய சாதுக்கள் கோஷ்டி.

காமராஜர் பங்களா- கொலை முயற்சி
டெல்லி இல்லத்தில் பகல் உணவை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் காமராஜர். அப்போது பெரும் கூச்சலுடன் சாதுக்கள் கும்பல் ஒன்று காமராஜர் பங்களாவுக்குள் நுழைந்தது. பாதுகாவலர்கள் தடுத்தனர்.. துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர்.. அடங்குமா அந்த கூட்டம்? காமராஜர் உள்ளே இருப்பதை உறுதி செய்து கொண்டு வெறிகொண்டு பாய்ந்தது.. சரமாரி கற்களை வீசின. காமராஜரின் உதவியாளர் அம்பி எனும் வரதராஜன் தாக்கப்பட்டு குற்றுயிராக வீசப்படுகிறார். காமராஜரின் பங்களாவுக்கு தீ வைக்கிறது அந்த கும்பல்.. அவர்களது நோக்கம், காமராஜரை உயிரோடு தீ வைத்து எரித்து கொல்ல வேண்டும் என்பதுதான்.. ஆனால் காமராஜர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிடுகிறார். இதுதான் காமராஜரை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற வரலாறு. அன்று இந்தியாவை இச்சம்பவம் பதறவைத்தது. தந்தை பெரியார் வெகுண்டு எழுந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். அதே கால கட்டத்தில் காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்ற நூலையும் பெரியார் வெளியிட்டு மக்களிடம் உண்மையை கொண்டு சேர்த்தார்!












Click it and Unblock the Notifications