ராமர் கவிதையால் வழக்கு போட்ட திமுக அரசு- அன்று ராமன் எந்த கல்லூரியில் படித்தான் என கேட்ட கருணாநிதி!
சென்னை:
வீட்டு மலக்குழியில்
ஒருவாரமாய் அடைப்பு
அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல்.. இவ்வாறு துவங்கும் சர்ச்சைக்குரிய கவிதையை எழுதியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி. இதில் ராமர், லட்சுமணர், அனுமன், சீதை ஆகியோர் பெயர்களும் இடம் பிடித்தன. இந்த கவிதை கடவுள் ராமரை இழிவுபடுத்திவிட்டதாக பாஜகவினர் புகார் அளித்ததால் உடனே தமிழ்நாடு போலீசாரும் வழக்குப் பதிவு செய்தது.
தமிழ்நாடு போலீசாரின் இந்த நடவடிக்கை ஒரு தரப்பால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதில் முக்கியமான ஒன்று இந்த விவாதங்களில் இடம்பெறுவது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ராமர் தொடர்பான நிலைப்பாடு. ராமன் பற்றி கருணாநிதி கேள்வி கேட்டதால் பெரும் பிரளயமே வெடித்து பாஜக அலுவலகத்தையே படைசூழ தாக்கிய அதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசுதான் இன்று ராமர் குறித்த கவிதை ஒன்றுக்காக கவிஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது என்பதுதான் அந்த விவாதம்.
2007-ம் ஆண்டு இந்திய அரசியலில் பெரும் களேபரத்தை உருவாக்கியது கருணாநிதியின் ஒற்றை கருத்து. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 16-ல் ஈரோடு மாநகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய கருணாநிதி, திமுகவை அழிக்க நினைக்கும் சில குள்ளநரிகள் கூறுகின்றன. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதன், அவன் பெயர் ராமனாம்.. அவன் கட்டிய பாலத்தின் பெயர் ராமர் பாலமாம்.. அந்த பாலத்தின் மீது யாரும் கை வைக்கக் கூடாது என்கிறார்கள். அந்த ராமன் எந்த பொறியியல் கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு வந்து இந்த பாலத்தைக் கட்டினான்? அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என சீறினார். அப்புறம் என்ன கச்சேரி களைகட்டிவிட்டது அகில இந்திய அளவில்.
கருணாநிதியின் இந்த கருத்துக்காக அவரது தலையை, நாக்கை துண்டித்துவிட்டு வர வேண்டும் என வெறித்தனமான கட்டளை பிறப்பித்தார் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம்விலாஸ் வேதாந்தி. தமிழ்நாடு சும்மாதான் இருக்குமா? வேதாந்திக்கும் பாஜகவுக்கும் எதிராகவும் வரிந்து கட்டியது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அப்போது திமுகவின் முற்றுகைக்குள் சிக்கியது. தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தார். பாஜக தலைவர்கள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் இன்றைய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுகவின் போர்ப்படை தளபதி பரிதி இளம்வழுதி, அன்பழகன், செயலில் சிட்டு சைதை கிட்டு, செங்கை சிவம் என பெரும் பட்டாளம்.. பாஜக தலைமை அலுவலகம் சரமாரியாக கற்களால் தாக்கப்படுகிறது. .அந்த வீதியே பெரும் போர்க்களமாக காட்சி தருகிறது. பாஜகவின் கொடிக் கம்பம் அலுவலக வாசலிலேயே வெட்டி சாய்க்கப்பட்டது.
தங்களது தலைவர் ராமன் பற்றி விமர்சித்ததை எதிர்த்த காரணத்தால் பாஜகவை ஒரு கை பார்த்தது அன்றைய திமுக. அதே திமுகவின் அரசுதான் ராமரை விமர்சித்த காரணத்தாலேயே கவிஞர் விடுதலை சிகப்பி மீது வழக்கை ஏவிவிட்டிருக்கிறது என்பதுதான் திமுக ஆதரவாளர்கள் ஒரு தரப்பின் ஆதங்கம். அதேநேரம், இப்போதுள்ள சூழலும் அப்போதுள்ள சூழலும் வேறு. மதரீதியாக மக்களை பாஜக எளிதாக ஒருங்கிணைத்தால் அது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் திமுகவில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications