"மாறா.. கீழே இறங்கி வா".. இளக வைத்த சேகர் பாபு.. "தலைவா உனக்காக இறங்கி வர்றேன்".. மறக்க முடியாத 2019
திமுக எம்எல்ஏ சேகர் பாபு ஒரு உயிரை காப்பாற்றினார்
சென்னை: "மாறா... கீழே இறங்கி வா" என்று சேகர் பாபு எம்எல்ஏவின் குரலை கேட்டதுமே தற்கொலை செய்து கொள்ள சென்ற நபரின் மனசு அன்று மாறிவிட்டது. இந்த ஆண்டில் எத்தனையோ சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தாலும் இந்த சம்பவத்தையும் நாம் எளிதில் மறந்து விட முடியாது.
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர் சேகர் பாபு. இவரது கடுமையான உழைப்பு, விசுவாசத்தினை கண்ட திமுக, இன்றுவரை வடசென்னை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் உள்ளது. தற்போது சேகர்பாபு துறைமுகம் பகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். தொகுதியில் நல்ல செல்வாக்கு. பகுதி மக்களிடம் குடும்ப உறுப்பினரில் ஒருவராகவே இவரது செயல்பாடும், பேச்சும் இருக்கும்.
இந்நிலையில், கடந்த ஜுன் 29-ம் தேதி ஒரு சம்பவம் அவர் தொகுதியில் நடந்தது... அன்றைய தினம் இரவு 9.15 மணி இருக்கும். தன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி சேகர் பாபு காரில் சென்று கொண்டிருந்தார்.
சத்யாநகர்
அப்போது, சத்யா நகர் போர்நினைவு சின்னம் அருகே நிறைய கூட்டம் சேர்ந்திருந்தது. போலீசாரும், தீயணைப்பு துறையினரும் நின்றிருந்தனர். இதை பார்த்ததும், சேகர்பாபு பதறி போய்விட்டார். யாருக்கு, என்ன ஆச்சோ என்று பதட்டப்பட்டு, வண்டியை நிறுத்த சொன்னார்.
சத்யா நகர்
சேகர் பாபுவை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் ஓடிவந்து விஷயத்தை சொன்னார்கள். சத்யா நகரை சேர்ந்த மாறன் என்பவருக்கு குடும்பத்தில் பொண்டாட்டியுடன் சண்டையாம். அதனால் மனசு உடைஞ்சு, டவர் உச்சியில் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுப்பதாக சொன்னார்கள்.
செத்துவிடுவேன்
டவருக்கு கீழே மாறனின் குடும்பமே கதறி கொண்டிருந்தது. போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கீழே இறங்கி வந்துவிடுமாறு மாறனிடம் மன்றாடி கொண்டிருந்தனர். இப்படியே ஒரு மணி நேரமாக "குதித்து விடுவேன், செத்து விடுவேன்" என்று மாறன் எல்லாரையும் தவிக்க விட்டுள்ளார்.
மாறா.. இறங்கி வா
இதையெல்லாம் கேட்ட பிறகு, அடுத்த செகண்டே சேகர்பாபு, "மாறா.. கீழே இறங்கி வா.. எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசிக்கலாம்" என்றார். சேகர் பாபு குரலை கேட்டதும், "தலைவா.. வந்துட்டீங்களா, இங்க சத்யா நகரில் என்ன நடக்குது தெரியுமா, கஞ்சா விக்கறாங்க... சாராயம் காய்ச்சறாங்க. இந்த போலீஸ்காரங்க எதையும் கண்டுக்கறது இல்லை, எனக்கு வீடு கிடையாது.. உங்க ஒருத்தருக்காக கீழே இறங்கறேன்" என்று சொல்லி இறங்கினார்.
கூட்டம்
இறங்கி வந்த அவரிடம் காரில் வைத்திருந்த தன்னுடைய சட்டையை எடுத்து கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார். சட்டையை போட்டுக்கொள்ள அந்த நபர் கூச்சப்படவும், சேகர் பாபுவே அவருக்கு போட்டு விட்டார். கையில் ரூ 3 ஆயிரம் தந்து, "காலைல வீட்டுக்கு வந்து என்னை பாரு" என்று சொல்லி விட்டு கிளம்பினார். இதுக்கு அப்பறம்தான் மொத்த கூட்டமும் நிம்மதி ஆனது.
சேகர்பாபுவின் ஒத்த வார்த்தையை கேட்டதும், தற்கொலை செய்யும் முடிவையே கைவிட்ட இந்த பரபரப்பு சம்பவம் மறக்க முடியாத ஒன்றாகும்.