Flashback: ஒற்றை நடைபயணத்தால் தமிழகத்தை உலுக்கிய கருணாநிதி! நடையாய் நடந்தும் ஜொலிக்காமல் போன வைகோ!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நடத்திய ஒரு நடைபயணம் 1980களில் தமிழக அரசியலையே அதிர வைத்தது. 1990களில் மதிமுக என்ற கட்சியை தொடங்கி அதன் பொதுச்செயலாளர் வைகோ, ஏராளமான நடைபயணங்கள் மேற்கொண்டும் ஆக்கப்பூர்வமாக அவருக்கு கை கொடுக்காமலே போய்விட்டது.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் 2024 லோக்சபா தேர்தலை மையமாக வைத்தும் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தேசிய அரசியலில் சந்திரசேகர், ராஜீவ் காந்தி, அத்வானி நடத்திய யாத்திரைகள் கவனம் ஈர்த்தவை. மாநிலங்களில் மறைந்த என்.டி.ராமராவ், ராஜசேகர் ரெட்டி மற்றும் அண்மையில் திக்விஜய்சிங், மமதா நடத்திய பாத யாத்திரை பயணங்கள் கை கொடுத்தவை.

தமிழர் பெரும் படை
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாடு விடுதலைக்கு முன்னர் 1938-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தமிழர் பெரும் படையின் பாதயாத்திரை அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை தந்தது. இந்த தமிழர் பெரும் படை சென்னையில் வந்து சேர்ந்த போதுதான் தமிழ்நாடு தமிழருக்கே என்ற தனிநாடு முழக்கத்தை தந்தை பெரியார் பிரகடனம் செய்தார்.

கருணாநிதி நெடும் பயணம்
நாடு விடுதலைக்குப் பின்னர் 1980களில் கருணாநிதி நடத்திய நீதிகேட்டு நெடும் பயணம், தமிழக அரசியலையே உலுக்கி எடுத்தது. திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் மாயம், தட்டிக்கேட்ட சுப்பிரமணிய பிள்ளை மரணம் ஆகியவற்றை முன்வைத்து 1982-ல் கருணாநிதி இந்த நெடும் பயணத்தை தொடங்கினார். மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை நடந்தே சென்றார் கருணாநிதி. 1982-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 22-ந் தேதி வரை 8நாட்கள் கருணாநிதி நடந்து சென்றார். இந்த பயணத்தால் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டது.

வைகோ நடைபயணம்
இதன்பின்னர் திமுகவில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட வைகோ, மதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமது தொண்டர் படையுடன் மிடுக்காக வைகோ நடந்தே வந்தார். வைகோவின் இந்த நடைபயனம் மிகப் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

எத்தனை எத்தனை பயணங்கள்?
இதேபோல் முல்லைப் பெரியாறு அணை, நியூட்ரினோ பிரச்சனை, பூரண மதுவிலக்கு என பல பிரச்சனைகளை கையில் எடுத்து வைகோ நடைபயணங்கள் மேற்கொண்டார். நடைபயணங்களின் நாயகன் என வைகோவுக்கு புகழாரமும் புனைபட்டமும் கிடைத்தது தவிர அரசியல் ரீதியாக இம்மியளவும் அவருக்கு கை கொடுக்காமல் போய்விட்டது வரலாற்று பரிதாபம்!












Click it and Unblock the Notifications